25 மாவட்டங்களில் புதிய கொரோனா பாதிப்பு 10க்கும் குறைவு..

தமிழகத்தில் 25 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களுக்கே புதிதாக கொரோனா தொற்று பாதித்துள்ளது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 10 லட்சம் பேருக்குப் பாதித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த வைரஸ் நோய் பரவத் தொடங்கியது. ஆரம்பத்தில் மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பாதித்து பெரும் பீதியை ஏற்படுத்தியது. தினமும் 100, 200 பேர் இந்த நோய்க்குப் பலியாயினர். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு நோய்ப் பரவுவது குறையத் தொடங்கியது.

தற்போது இந்நோய் பற்றிய பயமே மக்களுக்கு போய் விட்டது. இருதய நோய் உள்ளிட்ட வேறு நோய்ப் பாதிப்பு உள்ளவர்கள் மட்டுமே பயத்தில் முன்னெச்சரிக்கையாக இருக்கிறார்கள்.தமிழக அரசு நேற்று(பிப்.11) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, 55 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்ததில் புதிதாக 481 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களையும் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 43,690 ஆக உயர்ந்தது.மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 490 பேரையும் சேர்த்து, இது வரை 8 லட்சத்து 27 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ளனர்.

நோய்ப் பாதிப்பால் நேற்று 6 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,402 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4294 ஆகக் குறைந்துள்ளது.சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கொரோனா பரவுவது நீடிக்கிறது. சென்னையில் நேற்று புதிதாக 146 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 47 பேருக்கும், செங்கல்பட்டு 33 பேர், திருவள்ளூர் மாவட்டத்தில் 29 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 7 மாவட்டங்களில் 10 முதல் 20 பேர் வரை நோய் பாதிப்புக்குள்ளாக்கினர். 25 மாவட்டங்களில் 10க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

You'r reading 25 மாவட்டங்களில் புதிய கொரோனா பாதிப்பு 10க்கும் குறைவு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கேஷுநட், பயிறு வகைகளில் இருக்கும் முக்கிய சத்து உங்கள் உடலில் உள்ளதா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்