தமிழகத்தில் 11 மாதங்களுக்குப் பிறகு ஏ.சி. பேருந்துகள் இயங்க அனுமதி

அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை இயக்குவதற்குத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் கோவிட்-19 பாதிப்பு குறைந்ததை அடுத்து ஏ.சி. பேருந்துகள் இயக்கத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உடல்நலக் குறைவுள்ளவர்களும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களும் குளிர்சாதன பேருந்துகளில் பயணிக்க அனுமதியளிக்கப்படவில்லை.கொரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின் காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் மாநிலத்தில் குளிர்சாதன பேருந்துகள் இயக்கத்துக்குத் தடைவிதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சாதாரண பேருந்துகள் இயங்கிவந்தாலும், குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. விமானம் மற்றும் ரயில்கள் குளிர்சாதனப் பெட்டிகளோடு இயங்குவதைக் குறிப்பிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் ஏ.சி. பேருந்துகளை இயக்க அனுமதி கேட்டு வந்தன. அரசுடைமையாக்கப்பட்ட போக்குவரத்துக் கழகங்களில் 702 குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படாததால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது அனைத்து தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களும், தனியார் நிறுவனங்களும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளின் பணியாளர் பேருந்துகள், பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவ மாணவியருக்கான பேருந்துகளுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குளிர்சாதன பேருந்து இயக்கத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஏற்கனவே உடல்நல குறைவுள்ளோர், 65 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் குளிர்சாதன பேருந்துகளில் பயணிக்கக்கூடாது. குளிர்சாதன பேருந்துகளில் வெப்பநிலை 24 முதல் 30 டிகிரி செல்சியஸுக்குள் இருக்கவேண்டும். ஈரப்பதம் 40 முதல் 70 சதவீதமாக இருக்கவேண்டும். முடிந்த அளவு பேருந்துக்குள் காற்றோட்ட வசதி இருக்கவேண்டும். பயணியர் அமரும் இருக்கைகள், காலியாக விடப்படும் இருக்கைகள் குறிப்பிடப்படவேண்டும். ஒவ்வொரு சுற்றுக்கும் பேருந்து கிருமிநாசினியால் சுத்தப்படுத்தப்பட வேண்டும். பேருந்துகளின் வாசல் அருகே சானிடைசர்கள் வைக்கப்படவேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

You'r reading தமிழகத்தில் 11 மாதங்களுக்குப் பிறகு ஏ.சி. பேருந்துகள் இயங்க அனுமதி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வங்கி லாக்கர்களுக்கு புதிய விதிகளை வகுக்க ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்