சிலை கடத்தல் வழக்கு... ஆவணங்கள் கேட்கும் நீதிமன்றம்

சிலை கடத்தல் வழக்கின் ஆவணங்கள் கேட்கும் நீதிமன்றம்

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றுவது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு கடந்த 1ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதித்தது.

வழக்குகளை சிபிஐ க்கு மாற்றியதை நியாயப்படுத்தி தமிழக அரசும் பதில்மனுவை தாக்கல் செய்துள்ளது.

அதில்,"அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது; குற்றவாளிகளை தண்டிக்கவே சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்" என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அரசு முடிவுக்கு ஆதரவாகவும், வழக்கில் தங்களையும் இணைக்க கோரியும், தமிழ்நாடு கோவில் செயல் அதிகாரிகள் பேரவை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் சிறப்பு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜயநாராயண், ஏற்கனவே இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.

தமிழக அரசின் பதில் மனுவுக்கு பதிலளிக்க, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றியது தொடர்பாக தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் இடையே நடந்த கடிதப் பரிமாற்றங்கள் தொடர்பான ஆவணங்களை தனக்கு வழங்க வேண்டும் என்று மனுதாரர் யானை ராஜேந்திரன் கோரிக்கை வைத்தார்.

அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், அந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கில் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப மனுதாரரான ராஜேந்திரனுக்கும் நீதிபதிகள் அனுமதி அளித்து உத்தரவிட்டனர். பின்னர், இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் செப்டம்பர் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You'r reading சிலை கடத்தல் வழக்கு... ஆவணங்கள் கேட்கும் நீதிமன்றம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முக்கொம்பு அணை மதகு உடைப்பிற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்