அர்ச்சகர்கள் தெய்வீக பணியாற்றவில்லை... நீதிமன்றம் வேதனை

அர்ச்சகர்கள் தெய்வீக பணியாற்றவில்லை - நீதிமன்றம்

கோயில் அர்ச்சகர்கள் தெய்வீக தன்மையின்றி இயந்திரதனமாக பணியாற்றுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் புன்னைவனநாதர் சன்னிதியில் லிங்கத்தை பூஜிக்கும் மயில் சிலை காணாமல் போனதால், புதிய சிலை வைத்து கும்பாபிஷேகம் நடத்த உத்தரவிட வேண்டும் என ரங்கராஜன் நரசிம்மன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வாயில் பூவுடன் கூடிய மயில் சிலை 2004க்கு பின் காணாமல் போனதாகவும், தற்போது வாயில் பாம்புடன் இருப்பது போன்ற சிலை வைக்கப்பட்டிருப்பதாகவும், இது ஆகமத்துக்கு எதிரானது எனவும் மனுதாரர் வாதிட்டார்.

கோவில் நிர்வாகத்தின் அறங்காவலர்களையும், செயல் அதிகாரியையும் நீக்கிவிட்டு, கோவில் முறையாக நிர்வகிப்பதை உறுதி செய்ய உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆகம வல்லுனர்கள், சட்டவல்லுனர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை விடுத்தார்.

வாதத்தை கேட்டறிந்த நீதிபதிகள், "சிலை மாறியிருப்பது குறித்து அர்ச்சகர்கள் அரசின் கவனத்துக்கு ஏன் கொண்டு செல்லவில்லை. அது அவர்கள் கடமை. அர்ச்சகர்கள் தெய்வீக தன்மையின்றி இயந்திரத்தனமாக பணியாற்றுகிறார்கள்" என வேதனை தெரிவித்தனர்.

அப்போது அறநிலைய துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுசம்பந்தமாக விசாரணை நடந்து வருவதாகவும், மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்கவும் கோரினார். இதை ஏற்ற நீதிபதிகள், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

You'r reading அர்ச்சகர்கள் தெய்வீக பணியாற்றவில்லை... நீதிமன்றம் வேதனை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமைதி, நல்லிணக்கத்தை குலைக்க சதி... ராமதாஸ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்