கனடாவில் பெண்களுக்காக 20,000 கோடி முதலீடு - இந்திய வம்சாவளி அமைச்சர் அறிவிப்பு

கனடாவில் பெண்களுக்காக 20,000 கோடி முதலீடு

அமெரிக்க கணினி நிறுவனமான 'டெல் டெக்னாலஜிஸ்' கனடா தலைநகர் டொரண்டோவில் பெண் தொழில் முனைவோர் கூட்டமைப்புக்காக மூன்று நாள் கருத்தரங்க நடத்தியது.

இதில் உரையாற்றிய கனடா அரசின் சிறுதொழில்களுக்கான அமைச்சர் பர்திஷ் சாக்கர், "பெண்ணிய கொள்கை கொண்ட எங்கள் அரசாங்கம், அனைத்து பாலினத்தவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கும் வண்ணம் செயல்பட்டு வருகிறது. பாலின வேறுபாடு கருதாமல் வளருவதற்கான வாய்ப்பு அனைவருக்கும் வழங்கப்படுகிறது," என்று கூறினார்.

நல்வாழ்வை தேடி உலகம் முழுவதிலுமிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்து வருவோர் மற்றும் அகதிகளுக்காக முதலீடு செய்வதை தங்கள் அரசு கவனத்தில் கொண்டுள்ளதாகவும், தற்போது கனடாவின் வர்த்தகத்தில் 16 சதவீதமாக இருக்கும் பெண்களின் பங்கு, 2025-ஆம் ஆண்டில் இருமடங்காக, 32 சதவீதமாக உயர்வதற்காக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடுவின் அரசு உழைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

2018 - 19 நிதியாண்டில் பெண் தொழில்முனைவோர் நடத்தும் வர்த்தகத்திற்காக 2 பில்லியன் கனடா டாலர்கள் (ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய்) ஒதுக்கப்பட இருப்பதாகவும் அவர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

38 வயதான பர்திஷ் சாக்கர், கனடாவில் பிறந்திருந்தாலும் அவரது பெற்றோர் 1970-ம் ஆண்டுகளில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்துள்ளனர். ஒண்டாரியோவின் வாட்டர்லூ தொகுதியிலிருந்து கனடா நாடாளுமன்றத்தின் பொதுமக்கள் சபைக்கு தேர்வாகியுள்ள முதல் பெண் தலைவர் இவர்.

“என்னுடைய தாத்தாவும், பாட்டியும் தங்கள் குடும்பம் கனடாவுக்கு குடிபெயரும் என்றும், தங்கள் பேத்தி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர் பொறுப்பை ஏற்பாள் என்றும் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள். ஒட்டாவாவிலுள்ள கனடா நாடாளுமன்றம் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஆங்கிலம், பிரஞ்சுக்கு அடுத்தபடியாக பஞ்சாபியை மூன்றாவது மொழியாக அங்கீகரித்துள்ளது" என்று சாக்கர் தெரிவித்துள்ளார்.

30 அமைச்சர்கள் கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடுவின் அமைச்சரவையில் சரி பாதி எண்ணிக்கையில் பெண்கள் உள்ளனர். கனடாவில் 13 லட்சம் பேர் இந்திய வம்சாவளியினராக இருப்பதால், இந்தியாவுடன் வர்த்தகம் மற்றும் சுற்றுலா உறவுகளை வலுப்படுத்த கனடா முற்படுகிறது.

You'r reading கனடாவில் பெண்களுக்காக 20,000 கோடி முதலீடு - இந்திய வம்சாவளி அமைச்சர் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்