ஜன.20ல் ஜோபிடன் பதவியேற்பு.. துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர்.. தலைநகரில் ராணுவம் குவிப்பு..

அமெரிக்காவில் புதிய அதிபராக ஜோ பிடன் வரும் 20ம் தேதி பதவியேற்கும் நிலையில், நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு காரில் துப்பாக்கியுடன் வந்த மர்மநபரால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது தலைநகரில் 25 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பரில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டிரம்ப்பை தோற்கடித்து, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றி அதிகாரப்பூர்வமாக ஜன.6ம் தேதி அறிவிக்கப்பட்டு, ஜன.20ம் தேதி அவர் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றியை அறிவிக்காமல் தடுக்கும் வகையில் டிரம்ப் ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். டிரம்ப் தனது தோல்வியை மறுத்து பேசியதுடன், ஆதரவாளர்களை போராடுமாறு தூண்டி விட்டிருந்தார். அதைத் தொடர்ந்துதான் கலவரம் வெடித்தது. நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் வன்முறையாளர்கள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். கலவரத்தில் 5 பேர் பலியாகினர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கலவரத்திற்கு இடையே ஜோ பிடன் வெற்றி அறிவிக்கப்பட்டு விட்டதால், இதற்கு மேலும் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்த டிரம்ப், தனது தோல்வியை ஏற்றுக் கொண்டு விட்டார்.

இந்நிலையில், வரும் 20ம் தேதியன்று ஜோ பிடன் புதிய அதிபராகவும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் பொறுப்பேற்க உள்ளனர். வாஷிங்டனில் பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் போது டிரம்ப் ஆதரவாளர்கள் மீண்டும் கலவரத்தில் ஈடுபடலாம் என்று அஞ்சப்படுகிறது. அதை தடுப்பதற்காக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தலைநகர் வாஷிங்டனில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, பதவியேற்பு விழா நடக்கும் அரங்கம் அமைந்துள்ள நாடாளுமன்ற வளாகத்திற்குள் வந்த ஒரு காரை பாதுகாப்பு படையினர் நிறுத்தி சோதனை நடத்தினர். பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்ததாக கூறி, ஒரு அழைப்பிதழை காட்டியுள்ளார். அது போலி என்று உறுதி செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அவர் வெர்ஜீனியா மாகாணத்தை சேர்ந்த வெஸ்லி அலேன் பிலியர் என்பது தெரிய வந்தது. அவரது காரில் தானியங்கி துப்பாக்கி மற்றும் 509 தோட்டாக்கள் இருந்ததை கண்டு அதிர்ந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

இந்நிலையில், தலைநகரில் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், வெள்ளை மாளிகை, நாடாளுமன்றக் கட்டிடம்(capitol), அரசு அலுவலகங்களுக்கு அதிகமான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பதவியேற்பு விழாவை சீர்குலைக்கும் முயற்சிகளை தடுப்பதற்காக 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 25 ஆயிரம் ராணுவ வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், அதிபரின் பாதுகாப்பை கவனிக்கும் போலீஸ்படை(secret service), பாதுகாப்பு படையினருடன் இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.

You'r reading ஜன.20ல் ஜோபிடன் பதவியேற்பு.. துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர்.. தலைநகரில் ராணுவம் குவிப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அசாம் சட்டசபை தேர்தல்.. தேர்தல் ஆணையர்கள் ஆய்வு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்