ராஜமாதாவான அர்ச்சனா வெளியேற்றம்.. இந்த வார கேப்டன் பாலா.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது??

by Mahadevan CM, Dec 21, 2020, 11:40 AM IST

அட்டகாசமான உடையுடன் ஆண்டவரின் வருகை. நேற்று "World Humanitarian Day". 2005ல் இருந்து இந்த நாளை கொண்டாடி வருகிறோம். ஆனால் 2000 வருடங்களுக்கு முன்பே அய்யன் திருவள்ளுவர் மனிதம் பற்றி எழுதி வைத்திருக்கிறார்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை"

என்ற திருக்குறளை அடையாளம் காட்டினார்.

"தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்ற சொன்ன பாரதியும், வள்ளுவனின் பிரதி என்றார். எட்டயபுரம் சென்ற பொழுது, பாரதியின் நினைவு இல்லத்திற்கு சென்று வந்ததைப் பற்றி குறிப்பிட்டார்.

வள்ளுவனும், பாரதியும் சொன்னதை கண்ணதாசனும் எளிய வரிகளில் சொன்னதையும் சேர்த்த இடம் அருமை. நேற்று 2 நிமிடம் கமல் பேசியதை பலரும் கடந்து சென்று விடுவார்கள். ஆனால் கமல் அவர்மளின் ஆழ்ந்த அறிவுக்கிந்த 2 நிமிடம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்
இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனி உடைமை
நீங்கி வரவேண்டும் இன்னாட்டில் பொது உடைமை"

என்ற வரிகள் கண்ணதாசன் எழுதியது.

அகம் டிவி வழியே அகம்.

எடுத்தவுடன் காலர் ஆப் தி வீக். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏன் வந்தீர்கள் என்ற கேள்வியை கமலிடம் கேட்டார். அவரை 2574 வது தடவையாக அதற்கு பதில் சொன்னார்.

இந்த வார போன் கால் சோம்சேகருக்கு. "தனித்தன்மையுடன் விளையாடுவதில்லையே" என்ற கேள்வி. "நான் எந்த இடத்தில் தனித்தன்மையுடன் விளையாடினேன்" என்று வாய் தவறிச் சொல்லி உண்மையை ஒத்துக் கொண்டார். "உண்மையை சொல்றங்க தெய்வத்துக்குச் சமம் மணிமேகலை" என்ற வடிவேலுவின் டயலாக்கை நினைத்துக் கொள்ளவும்.

சென்ற வாரம் கோபப்பட்ட ஆஜித்திற்கு பாராட்டு. "சிட்டிக்கு கோபம் வருது வசீ" என்ற கணக்காக கமல் சார் பாராட்டு இருந்தது. ஆஜித், ஷிவானி மேல் இங்கு தொடர்ந்து சில குற்றச்சாட்டுகல் வைக்கப்படுகிறது. அவர்கள் கருத்து சொல்வதில்லை, கோபப்படுவதில்லை என்றெல்லாம் சொல்பவர்கள், அவர்கள் இருவரின் வயதை கருத்தில் கொள்வதில்லை. 19 வயதில் அந்த வீட்டில் இருக்கிறார்கள். அந்த வீட்டில் உள்ள மற்றவர்கள் அனைவரும் வயதில் மூத்தவர்கள் என்பது மட்டும் அல்லாமல் ஏதேனும் ஒரு துறையில் சாதனை புரிந்தவர்கள். அப்படி இருக்கும் போது இவர்களால் எப்படி கருத்துக்களை முன்வைக்க முடியும். அப்படியே சொன்னாலும் யார் ஏற்றுக் கொள்வார்கள்.

சாதி, மதம் அனைத்தையும் கடந்து இந்தியக் குடும்பங்களில் "பெரியவர்களை மதிக்க வேண்டும்" "அவர்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்" "அவர்களை எதிர்த்துப் பேசக்கூடாது" இப்படியெல்லாம் சொல்லித்தான் குழந்தைகள் வளர்க்கப்படுகிறார்கள். ஆஜித்தும், ஷிவானியும் அப்படி வளர்க்கப்பட்ட சராசரி குழந்தைகள் தான். "அப்படின்னா எதுக்கு இங்க வரணும்" என்ற கேள்வி விதண்டாவாதம். இது ஒரு கேம் ஷோ என்பதால் தேவையான இடத்தில் இருவரும் பேசி இருக்கிறார்கள். அவர்களின் குரல் எப்படி மதிக்கப்படும் என்பது தான் இங்க குறிப்பிடும் விஷயம். நம்மை விட வயது குறைந்தவர்களின் குரலை ஏற்றுக் கொள்ளும் பழக்கமும் நமது சமுதாயத்தில் இல்லை என்றே சொல்லலாம்.

அதே சமயம் பாலா வளர்ந்த விதத்தை இவர்களோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். எந்த விதமான ஒழுக்க நெறிகளும் போதிக்கப்படாமல், தவறான முன்னுதாரணங்களை பார்த்து வளர்ந்த பாலாவின் மேல் வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் என்ன? வயதிற்கு மரியாதை கொடுக்காமல் அனைவரையும் எதிர்த்துப் பேசுகிறார், அவமானப்படுத்துகிறார் என்பது தானே. குழந்தைகள் வளர்ப்பில் இரு துருவ உதாரணங்கள் நமக்கு காணக் கிடைக்கிறது.

கன்பெஷன் ரூமில் ஷிவானி அழுததை குறிப்பிட்டு "ஆர் யூ ஆல்ரைட் ஷிவானி" என்று கேட்டார். ஷிவானி அழுது நான்கு நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது ஆண்டவரே. கவுன்சிலிங் என்று அழைக்கப்பட்ட கன்பெஷன் ரூம் மீட்டிங், ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்குமே ஒரு ஸ்ட்ரெஸ் பஸ்டர். சக போட்டியாளர்கள் முன் அழுது தன்னை வீக்கான போட்டியாளராக காட்டிக் கொள்வதில் ஷிவானிக்கு விருப்பம் இல்லை. அப்படி அவர் அழுத ஒரு சந்தர்ப்பமும், பேசுபொருளானது. எனவே வெளியில் தன்னை வலிமையாகக் காட்டி கொண்டார் ஷிவானி. ஆனால் தனது ஆற்றாமையை கொட்டித் தீர்க்க ஒரு இடம் கிடைத்தவுடன் கட்டுப்படுத்த முடியாமல் அழுது தீர்த்து விட்டார். இந்த "கண்ணிர் நல்லது" தான். ஏற்கனவே கமல் அவர்கள் குறிப்பிட்டது போல், அங்கே கண்காணிப்பில் இருக்கும் மனநல மருத்துவர்களின் திட்டமாக கூட இருக்கலாம்.

"மன்னி" ரம்யாவின் கேப்டன்ஷிப் பற்றி கருத்து கேட்டார். மன்னன்-மன்னி என்பது கிரேசி மோகனின் பாதிப்பில் வந்த வார்த்தையாகத் தான் இருக்கும். பெஸ்ட் பர்பாமன்ஸ்க்கு ரம்யாவை நாமினேட் செய்தவர்கள், நேற்று கேப்டன்ஷிப் பற்றிய மதிப்பீட்டிற்கு ஒரு "க்" வைத்து பேசினார்கள். லிவிங் ஏரியா, ஆக்டிவிட்டி ஏரியா, டாஸ்க் ஆரம்பிக்கு நேரம் ஆகியவற்றுக்கு ஹவுஸ்மேட்ஸை அழைப்பதில் சுணக்கம் இருப்பதாக சொன்னார்கள. ஆனால் அந்த கருத்தை ஆரி மறுத்தார்.லிவிங் ஏரியா மீட்டிங்கிற்கு வருவது, டாஸ்க்கின் போது தயாராவது அனைத்தும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பொறுப்பு. கேப்டன் வந்து அழைக்க வேண்டும் என்பதே தவறானது என்று குறிப்பிட்டார். ஒழுக்கம் சார்ந்த விஷயங்களில் ஆரி எப்போதுமே முன்னுதாரணமாக தான் இருக்கிறார.

சென்ற வாரத்தில் ஆரியை பார்த்து ரம்யா ஏதோ ஒரு வார்த்தை சொல்லிவிட்-டார் போலிருக்கிறது. அதற்காக அன்றே மன்னிப்பும் கேட்டிருக்கிறார். இந்த சம்பவம் நமக்கு காட்டப்படவில்லை. அதை கமல் முன்பு மீண்டும் நினைபடுத்தியது எத்ற்கு என்று ஆரி தான் விளக்க வேண்டும். தவறு நடந்திருக்கிறது, அதற்கு மன்னிப்பும் கேட்கப்பட்டு, அது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதன் பிறகும் அதைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. கமல் அவர்கள் குறிப்பிட்டது போல், மன்னிப்பு கேட்ட பிறகு அது முடிந்து போன விஷயமாக கருத வேண்டும். மற்றவர்கள் தவறை மறக்கவோ, மன்னிக்கவோ மனது இல்லாதவராக தான் ஆரி தன்னைக் காட்டிக் கொள்கிறார். இந்த வீட்டில் எப்போதோ நடந்த சின்ன விஷயத்தை கூட மறக்காமல் ஏதாவது ஒரு இடத்தில் குறிப்பிட்டு விடுகிறார். கடந்து வாருங்கள் ஆரி.

இடைவேளைக்கு பிறகு 4 முட்டை வைக்கப்பட்டிருந்தது. ஆரியும், ரியோவும் சேர்ந்து அதை உடைத்து அதில் இருந்து இருவரை காப்பாற்ற வேண்டும். அதற்கு ஒரு சுத்தியல் வேறு. முதலில் அனிதா காப்பாற்றப்பட்டார். அதை சரியாக கணித்தது ஆரி. நாலாவது முட்டையை உடைக்க பாலாவை அழைத்தார். அவரும் தனது ஸ்டைலில் முட்டையின் மேல் அமர்ந்து அதை உடைத்தார். சோம் தான் காப்பாற்றப்படுவார் என்பதை சரியாகக் கணித்தார் பாலா. மீதம் இருந்தது ஆஜித்தும், அர்ச்சனாவும்தான்.

இடைவேளையின் போது தான் வெளியே போகப்போவதாக நம்பிக்கையுடன் சொல்லிக் கொண்டிருந்தார் அர்ச்சனா. ரியோ, சோம், கேப்பியிடம் அழாமல் இருக்கச் சொன்னார். அதீத நம்பிக்கையுடன் காணப்பட்டார்.

இருவரில் யார் வெளியேறுவார்கள் என்ற கேள்விக்கு ஆஜித் காப்பாற்றப்படுவான் என்றே ஆரியும், பாலாவும் சொன்னார்கள். இறுதியில் அர்ச்சனா தான் வெளியேறினார்.

நிஷா வெளியேறிய போது அழுது அழற்றியவர் நேற்று வெளியேறும் போது, அழாமல் தன்னம்பிக்கையோட வெளியேறியது குறித்து பலரும் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இத்தனை நாட்கள் நாமினேஷனுக்கே வராமல் இருந்தாலும், இந்த முறை மக்களின் ஆதரவு தனக்கில்லை என்று அர்ச்சனாவுக்கு தெரியும். மேலும் குரூப்பிசம், பேவரட்டிசம், மற்றவர்களை முன்னிறுத்தி விளையாடியது, உடன் இருப்பவர்களை ஓவர் ஷேடோ செய்தது என பல விதமான குற்றச்சாட்டுகள் அர்ச்சனாவின் மேல் இருந்தாலும், அது எதையுமே அர்ச்சனா ஏற்றுக் கொள்ளவில்லை. அன்பு தான் அவருடைய ஸ்ட்ராட்டஜி என்பதை கமலே போட்டு உடைத்தாலும், அதை தைரியமாக ஒத்துக் கொண்டார். அவருடைய அன்பு ஸ்ட்ராட்டஜி சமூக வலைதளங்களில் கடுமையாக கலாய்க்கப்பட்டது. இன்றைய தேதியில் நீங்கள் புகழடைய வேண்டும், அல்லது ட்ரெண்டிங்கில் இருக்க வேண்டும் என்றால், ஒரு ட்ரோல் மெட்டிரியலாக இருந்தால் மட்டுமே முடியும் என்ற சமூக வலை தள விதியின் படி, அர்ச்சனா ஒரு ட்ரோல் மெட்டிரியல் ஆக்கப்பட்டார்.

தனிப்பட்ட முறையில் அது எனக்கு வருத்தமே. கடந்த 20 வருடங்களாக மக்களுக்கு அறிமுகமானவர். அதீத திற்மைசாலி. திருமணம், குழந்தைகள் காரணமாக கேரியரில் பிரேக் எடுத்தவர். பிறகு மீண்டும் வந்து, தனக்கென ஒரு இடம் பிடித்து, தன்னை நிரூபித்து, சூப்பர் ஸ்டாரின் பேட்டியை எடுக்கும் அளவுக்கு தன்னை உயர்த்திக் கொண்டவர். ஆனால் தனக்கென எந்த அடையாளமும் இல்லாதவர்களால் கலாய்க்கப்படுவது சமூக வலைதள அவலங்களில் ஒன்று.

இது ஒரு கேம் ஷோ என்பதை பலரும் அடிக்கடி மறந்து விடுகின்றனர். இங்கு நீங்கள் பிழைத்திருக்க கண்டிப்பாக ஒரு ஸ்ட்ராட்டஜி தேவை. இன்று பிக்பாஸ் டைட்டிலுக்கு தகுதியானவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் அனைவரிடமும் ஸ்ட்ராட்டஜி இருக்கிறது. ஆனால் அர்ச்சனாவினுடைய அன்பு ஸ்ட்ராட்டஜி, கொஞ்சம் ஓவர்டோசாகி போனதால் விமர்சிக்கப் பட்டது. மற்றபடி இந்த வீட்டில் இருப்பவர்களை விடவும் பிக்பாஸ் டைட்டிலுக்கு தகுதியானவர் அர்ச்சனா. எந்த ஒரு டாஸ்க்கிலும் அவர் சோர்ந்திருந்த யாரும் பார்த்ததில்லை. இவ்வளவு ஆக்டிவாக இருப்பதெல்லாம் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

"இனிமே சாப்பாட்டுக்கு என்ன பண்ணப்போறோம்" என்று பாலா கேட்டது, அர்ச்சனாவின் வெற்றிடத்தை சொல்லும். என்ன தான் சமையல் செய்ததை சொல்லிக் காட்டினாலும், தன்னுடைய வேலையில் அவர் எந்த குறையும் வைக்கவில்லை. மேலும் அங்கிருக்கும் மற்றவர்களை விட அதிகமாக வேலைகள் செய்தாலும், அதை காரணமாக வைத்து டாஸ்க் நடக்கும் போது ஒதுங்கியதில்லை. இன்னும் சொல்லப்போனால் எந்த ஒரு டாஸ்க்கிலும் முழுமையான பங்களிப்புக்கும் மேல் கொடுத்தவர் அர்ச்சனா தான். இப்போதைக்கு அனிதா மட்டுமே அங்கே அன்னபூரணி.

நேற்று வெளியேறும் போது அதீத தன்னம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் இருந்த அர்ச்சனாவை நாம் பார்த்தோம். வீட்டில் இருப்பவர்களின் எதிர்ப்பு, மக்களின் ஆதரவின்மை இரண்டுமே வெட்டவெளிச்சமாக தெரிந்தாலும், தன்னுடைய தோல்வியை ஏற்றுக் கொள்ள அர்ச்சனா தயாராக இல்லை. அவரை தோற்க்கடித்து அழ வைக்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு மத்தியில், தலை துவண்டு, கண்ணீர் விடாமல், தலை நிமிர்ந்து, உற்சாகத்துடன், அதீத தன்னம்பிக்கையுடன் வெளியே சென்றிருக்கிறார் அர்ச்சனா. உளவியல் ரீதியாக பெண்கள் எப்போதுமே வலிமையானவர்கள். நிஷாவின் தோல்விக்கு கண்ணிர் விட்டவர் தன்னுடையை தோல்விக்கு சிரித்துக் கொண்டே சென்றதும் ஒரு விதமான உளவியல் தான். "என்னை அழ வைக்கனும்னு தானே இதை செஞ்சீங்க நான் அழ மாட்டேன், இப்ப என்ன செய்வீங்க" என்பதாகத் தான் தோன்றியது.

ஒருவகையில் வரவழைக்கப்பட்ட உற்சாகமாக தோன்றினாலும். 20 ஆண்டுகளாக வேலை பார்த்த அனுபவம் அவருக்கு கை கொடுத்திருக்கிறது.

ஆஜித், ஷிவானி, சோம் போன்றவர்களை விட அர்ச்சனா எந்த விதத்திலும் தகுதி குறைவானவர் இல்லை.. மக்களின் முடிவாக இருந்தாலும் இது தவறான முடிவே.

வெளியே வந்த அர்ச்சனா கமலிடம் பேசிவிட்டு, தனக்கே உரிய பாணியில் படபடவென ஹவுஸ்மேட்ஸ்களிடம் பேசிவிட்டு, பாலாவை கேப்டானாக்கிவிட்டு வெளியே சென்றார். அடுத்தவர்களை கேப்டன் ஆக்கியதில் பங்கு இருப்பதாக சொன்ன பாலாவுக்கு, இப்போது அவருடைய கேப்டன்சியில் இன்னொருவருடைய பங்கு இருப்பது தான் விந்தை.

அதற்கு பிறகு சோம், ரியோ, கேப்பி மூவரின் ட்ராமா தான் பார்க்க சகிக்கவில்லை. இன்னும் 4 வாரம் தான். வெளியே சென்றால் பார்த்துக் கொள்ளலாம். அதற்கு இவ்வளவு பீலிங் காட்ட வேண்டியதில்லை.

புதிய கேப்டன் பாலா பெட்ரூமிலிருந்தே அணிகளை பிரித்தார். எங்கே என்ன தவறு நடந்தாலும் தன் பார்வைக்கு கொண்டு வருவது தான் வைஸ் கேப்டனின் வேலை என்று சொல்லி, சோமை வைஸ் கேப்டனாக நியமனம் செய்தார். சாப்பாடு முக்கியம் என்பதில் பாலா உறுதியாக இருக்கிறார். அது மற்ற ஆண்களுக்கும் தெரியும் என்பதால், அனிதாவையும் ரம்யாவையும் பகைத்துக் கொள்ள மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.

You'r reading ராஜமாதாவான அர்ச்சனா வெளியேற்றம்.. இந்த வார கேப்டன் பாலா.. நேற்று பிக் பாஸில் என்ன நடந்தது?? Originally posted on The Subeditor Tamil

More Bigg boss News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை