சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நீடிக்கும் கொரோனா பரவல்..

by எஸ். எம். கணபதி, Dec 24, 2020, 09:15 AM IST

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் கோவை மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் நீடித்து வருகிறது.தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவியது. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு, புதிதாக நோய் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. தமிழக அரசு நேற்று(டிச.23) வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் 1066 பேருக்குப் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது.

இதையும் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 10,080 ஆக உயர்ந்தது. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 1131 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 88,742 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 12 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,024 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 9314 பேர் சிகிச்சையில் உள்ளார்கள்.

சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர் மாவட்டங்களில் தினமும் 50க்கும் குறையாதவர்களுக்குத் தொற்று பரவி வருகிறது. மற்ற மாவட்டங்களில் நேற்று 50க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது. சென்னையில் நேற்று ஒரே நாளில் 302 பேருக்கும், கோவையில் 109 பேருக்கும், செங்கல்பட்டில் 77 பேருக்கும், திருப்பூரில் 52 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 52 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.
சென்னையில் இது வரை 2 லட்சத்து 23209 பேருக்கும், கோவையில் 51,600 பேருக்கும், செங்கல்பட்டில் 49,456 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 42,304 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது. தமிழகம் முழுவதும் நேற்று 65 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டதில் ஆயிரம் பேருக்குத்தான் தொற்று பாதிப்பு உறுதியானது. அதனால் புதிதாக கொரோனா பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது.

You'r reading சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நீடிக்கும் கொரோனா பரவல்.. Originally posted on The Subeditor Tamil

More Chennai News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை