கலாநிதி மாறன், ஏ.ஆர்.முருகதாஸ் மீது ஏன் கோபம் வரவில்லை?!.. உதயநிதிக்கு ஒரு கேள்வி

by Sasitharan, Apr 14, 2021, 21:34 PM IST

தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படம் 1995ல் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட நிலையில், படத்தில் 1997 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது சலசலப்பை ஏற்படுத்தியது. காரணம் 1995ல் அதிமுக ஆட்சியும், 1997ல் திமுக ஆட்சியும் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இது தொடர்பாக திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஒரு ட்வீட் பதிவிட்டு இருந்தார்.

அதில், ``கர்ணன் பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், அண்ணன் கலைப்புலி தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.

1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம் என உறுதியளித்தனர். நன்றி" என்று குறிப்பிட்டு இருந்தார்.

உதயநிதியின் வேண்டுகோள்படியே இன்று படத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1997 என்று குறிப்பிட்டதற்கு பதிலாக 1990 பிற்பகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை திமுகவினர் தற்போது வரவேற்று வருகின்றனர். ஆனால் ஒருபுறம் விமர்சனமும் எழுந்துள்ளது. இது தொடர்பாக பேஸ்புக் நெட்டிசன் ஒருவர் உதயநிதியின் நடவடிக்கையை கேள்வி எழுப்பியுள்ளார்.

அதில், ``சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் வெளியான 'சர்கார்' படத்தில் இடம்பெற்ற காட்சிகள் குறித்து உதயநிதி ஏ.ஆர்.முருகதாஸோடு ஏதாவது பேசி, காட்சிகளை மாற்ற வைத்தாரா?

இதே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், உதயநிதி தயாரிப்பில் வெளியான 'ஏழாம் அறிவு' படத்தில் இடஒதுக்கீடு எதிர்ப்பு வசனம் வந்ததே.. கழக கொள்கையை அப்போது நிலைநாட்டத் தவறிய உதயநிதி தற்போது வரை வருத்தமோ, மன்னிப்போ தெரிவித்து இருக்கிறாரா?

மாரி செல்வராஜ் மீது மட்டும் திமுகவினர் பாய்வதற்கு 'ஆதிக்கம்' என்பதைத் தாண்டி வேறு ஏதாவது பெயர் இருக்கிறதா?

90களின் பிற்பகுதியில் மாஞ்சோலை துப்பாக்கிச்சூடு, 1997ல் கோவையில் 19 முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச்சூடு - இதெல்லாம் திமுக ஆட்சியில் நிகழ்ந்தவை தானே? 'தாமிரபரணியில் கொல்லப்படாதவர்களுக்கு' எழும் அறச்சீற்றம் நியாயமானது; அது நேரடி பாதிப்பினால் உருவாவது.

மாரி செல்வராஜ் எந்த இடத்திலும் வரலாற்றைத் திரிக்கவில்லை. பல்வேறு காலக்கட்டங்களில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களின் அடிப்படையில் ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார். அவ்வளவே.
ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரான அரசு பயங்கரவாதம் திமுக காலத்திலும் நடந்திருக்கிறதே.. மறுக்க முடியுமா? இதே கோபம் ஏன் கலாநிதி மாறன் மீதோ, ஏ.ஆர்.முருகதாஸ் மீதோ ஏன் வரவில்லை?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்கு கழகம் பதில் சொல்லுமா?

You'r reading கலாநிதி மாறன், ஏ.ஆர்.முருகதாஸ் மீது ஏன் கோபம் வரவில்லை?!.. உதயநிதிக்கு ஒரு கேள்வி Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை