கரைப்புரண்டோடும் காவிரி ஆற்றுப்பாலத்தில் நின்றபடி செல்பி எடுத்தபோது, கையில் இருந்த 4 வயது சிறுவன் தவறி ஆற்றுக்குள் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வந்த கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனை காண ஏராளமான மக்கள், காவிரி ஆற்றுப் பாலங்களின் மீது குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் எல்.ஜி.பி நகரை சேர்ந்த பாபு மற்றும் அவரின் மனைவி ஷோபா தனது மகன் தன்வந்தின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் இன்று காவிரி ஆற்றுப்பாலத்திற்கு கரைபுரண்டோடும் காவிரி நீரை காண சென்றிருந்தனர்.
இந்நிலையில், சிறுவனை கையில் வைத்தபடி பாலத்தில் நின்றுக்கொண்டு செல்பி எடுத்தபோது, தன்வந்த் தவறி ஆற்றுக்குள் விழுந்தான். இதனால், அதிர்ச்சியடைந்த தன்வந்தின் பெற்றோர் கதறி அழுதனர். அங்கிருந்தவர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயனைப்பு துறை வீரர்கள் ஆற்றில் தேடினர். இதுவரை சிறுவன் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. பிறந்தநாளன்றே ஆற்றில் விழுந்த சிறுவன் கிடைப்பானா என்ற ஏக்கத்தில் அவனது பெற்றோர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.