திருநெல்வேலியில் திருமணமான 3 மாதத்தில் போலீஸ்காரர் மனைவி தற்கொலை

suicided by newly married wife of police at tirunelveli

by Subramanian, Apr 22, 2019, 09:53 AM IST

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் திருமணமான 3 மாதத்தில் போலீஸ்காரர் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாளையங்கோட்டை கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதியழகன். தனியார் பஸ் கண்டக்டர். இவரது மகள் ஜெயசூர்யா (வயது23). இவருக்கும், வண்ணார்பேட்டை கம்பராமாயணம் தெருவை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. முத்துக்குமார் தற்போது நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. முகாம் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார்.

ஜெயசூர்யா-முத்துக்குமார் தம்பதிகளின் திருமண வாழ்க்கை இனிதாக சென்றது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ஜெயசூர்யா வழக்கம் போல் அறைக்கு படுக்க சென்றார். நேற்று காலை அவரது அறைக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த முத்துக்குமார் குடும்பத்தினர் அறையின் உள்ளே பார்த்தனர். அங்கு ஜெயசூர்யா மின் விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள், பாளை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

ஜெயசூர்யா இறந்தது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் தூக்கில் பிணமாக தொங்கிய ஜெயசூர்யாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். ஜெயசூர்யாவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் கூறினர்.

மேலும் முத்துக்குமாரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி ஜெயசூர்யாவின் உறவினர்கள் கூறுகையில், ‘நேற்று இரவு வரை ஜெயசூர்யா பெற்றோரின் வீட்டிற்கு போனில் பேசினார். ஆனால் காலையில் அவர் இறந்தது அதிர்ச்சியாக உள்ளது. அவரது சாவில் மர்மம் உள்ளது. இதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும்’ என்றனர்.

இதையடுத்து போலீசார் ஜெயசூர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஜெயசூர்யாவின் கணவர் முத்துக்குமார் கேரளாவுக்கு தேர்தல் பணிக்கு சென்றிருந்தார். அவரை போலீசார் நெல்லைக்கு திரும்பி வரச் செய்தனர். முத்துக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜெயசூர்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். திருமணமாகி 3 மாதமே ஆவதால் ஜெயசூர்யா சாவு குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது. திருமணமான 3 மாதத்தில் போலீஸ்காரரின் மனைவி மர்மமாக இறந்த சம்பவம் பாளை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருத்தாசலம் ஏரியில் ஒரு வாரமாக மிதந்த பெண் சடலம்: பாலியல் பலாத்காரம் செய்து கொலையா?

You'r reading திருநெல்வேலியில் திருமணமான 3 மாதத்தில் போலீஸ்காரர் மனைவி தற்கொலை Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை