குறைந்த வெளிச்சம் கண்களுக்குக் கேடா?

Myths about eyesight

by SAM ASIR, Jul 12, 2019, 23:20 PM IST

கண்களே நம் உடலுக்கு, வாழ்க்கைக்கு வெளிச்சம் தருபவை. பார்வை இல்லையென்றால் வாழ்க்கை துன்பகேணியாகி விடும்.

ஆகவே, எல்லோருமே கண்களை பாதுகாப்பதில்  அக்கறையாயிருப்பார்கள். சிறுவயது முதலே பாட்டி, தாத்தாக்கள், பெற்றோர் கண்களை பாதுகாப்பதை குறித்து பல்வேறு அறிவுரைகளை பிள்ளைகளுக்குக் கூறுவார்கள். அனுபவ ஆலோசனைகள் நல்லவைதாம்.

ஆனால், செவிவழியாக பரவும் அத்தனை ஆரோக்கிய குறிப்புகளுமே அறிவியல் சார்ந்தவையாக இருப்பதில்லை. கண்களைப் பற்றி நிலவி வரும் நம்பிக்கைகளுள் எவை உண்மையென்று தெரிந்து கொள்ளலாமா?
மங்கிய ஒளியில் படித்தால் பார்வை பாதிக்கப்படும்:

இந்த நம்பிக்கை தவறு. குறைந்த வெளிச்சத்தில் புத்தகம் வாசித்தால் கண்கள் விரைவில் களைப்படைந்து விடும். ஆனால், இது பார்வைக்கு பாதிப்பை கொண்டு வராது. வெளிச்சம் நேராக புத்தகத்தின் மேல் விழுகிறதா என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். உங்கள் பின்னால் இருந்து வெளிச்சம் வருமாயின், நிழல் பட்டு வாசிக்க சிரமமாகும்.

கேரட் சாப்பிட்டால் பார்வை கூர்மையாகும்:
இந்த நம்பிக்கை சரியானது. கேரட், வைட்டமின் ஏ சத்து நிறைந்தது. ஆனால், கீரைகளும் பழங்களும் பார்வை நன்றாக தெரிவதற்கு இன்றியமையாதவை. இவற்றுள் வைட்டமின்களுடன் வேறு அநேக ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.

கண் புரை போன்ற பிரச்னைகள் வருவதை தடுக்கக்கூடிய பண்பு, கீரைகளுக்கும் பழங்களுக்கும் உண்டு. ஏற்கனவே பார்வை பிரச்னை இருந்தால், உணவின் மூலம் குணப்படுத்த இயலாது.
எல்லா நேரமும் கண்ணாடி அணிய தேவையில்லை

இந்த நம்பிக்கை தவறு. கண் மருத்துவர், கண்ணாடி அணிவதற்கு அல்லது உங்கள் தெரிவிற்கேற்ப கான்டாக்ட் லென்ஸ் அணிவதற்கு பரிந்துரை செய்திருந்தாரானால் தவிர்க்காமல் அணிந்து கொள்ளவேண்டும். கண்ணாடி அணியாமல் வாசிப்பது கண்களுக்குச் சிரமத்தை அளிக்கும்; கண்கள் விரைவில் சோர்ந்து போகும். கண்ணாடி அணிவதால் பார்வை பாதிக்கப்படாது.
நாள் முழுவதும் கம்ப்யூட்டரை பார்ப்பது தீங்கானது

இந்த நம்பிக்கை தவறு. நெடுநேரம் கணினி திரையை பார்ப்பது கண்களுக்கு தீங்கை விளைவிக்காது. கண்களுக்குச் சிரமம் ஏற்படலாம். ஆனால், கணினியில் வேலை செய்யும் இடத்தில் போதுமான வெளிச்சம் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு பிறகு பத்து நிமிடமாவது இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள்.

அந்த நேரங்களில் கணினியை பார்க்காமல் கண்களுக்கு ஓய்வு கொடுப்பது அவசியம்.
கருவிழிகளை ஒருங்கே நோக்கினால் நிலைத்துவிடும்

இந்த நம்பிக்கை தவறு. நம் கண்களிலுள்ள தசைகள், கண்களை எல்லா திசைகளிலும் சுழற்றுவதற்கு ஏற்றதாகவே உள்ளன. ஆகவே, கருவிழிகளை நடுமையத்தில் கொண்டு வந்து பார்ப்பதால், அவை அந்த நிலையிலேயே ஸ்தம்பித்து விடும் என்பது மூட நம்பிக்கையே!

You'r reading குறைந்த வெளிச்சம் கண்களுக்குக் கேடா? Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை