கொரோனா பாதிப்பு: எந்த நாள்கள் முக்கியமானவை தெரியுமா?

by SAM ASIR, Nov 11, 2020, 21:28 PM IST

கோவிட்-19 கிருமி உடலில் தொற்றிக்கொண்டால் ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட, கணிக்க இயலாத அறிகுறிகளை காட்டுகிறது. தொற்றின் ஆரம்பத்தில் வைரல் அல்லது ஃப்ளூ தாக்கம் போன்ற அறிகுறிகளே பெரும்பாலும் காணப்படுகிறது. தொற்றின் ஆரம்ப நாள்களின் அறிகுறிகள் குழப்பம் தருவதாகவே உள்ளன. பலருக்கு மிக இலேசான அறிகுறிகள் உள்ளன; இன்னும் பலர் அறிகுறிகளே இல்லாமல் உள்ளனர். 5 முதல் 10 நாள்களில்தான் தொற்றின் தீவிரத்தை அறிய முடிகிறது. தனிமைப்படுத்தப்பட்டுள்ள 5 முதல் 10 நாள் காலத்தில்தான் கோவிட் தாக்குதலின் பின்விளைவுகள் குறித்தும் அறிய முடியும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

5 மற்றும் 10 ஆகிய நாள்கள் ஏன் முக்கியமானவை?

கோவிட் பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்த பிறகு அல்லது நோய் தொற்று இருப்பது உறுதியான பிறகு சில விஷயங்களை கவனிக்கவேண்டும். பொதுவாக கோவிட் வைரஸ் உடலுக்குள் சென்று அடைகாத்து 2 முதல் 3 நாள்களுக்கு பிறகே அறிகுறிகள் தென்படுவதாக கருதப்படுகிறது. தொற்றின் முதல் பகுதி வைரஸின் எதிர்வினையாகும். ஆகவே பலருக்கு வைரஸ் காய்ச்சல் போன்றே தோன்றுகிறது. இரண்டாவது பகுதியிலேயே நோய் எதிர்ப்பு மண்டலம் செயல்பட ஆரம்பிக்கிறது. நோய் தொற்றை அழிப்பதற்கு நோய் எதிர்ப்பு மண்டலம் பெருமளவில் எதிர் உயிரிகளை உருவாக்கிறது. சில நேரங்களில் நோய் எதிர்ப்பு மண்டலம் அதிக அளவில் தூண்டப்பட்டு நிலைமை மோசமாகிறது. அப்படியான விளைவு தொற்று ஏற்பட்டு ஆறாம் அல்லது ஏழாம் நாளில் தெரிகிறது. பலருக்கு அந்த நேரம்தான் உண்மையான கோவிட் போராட்டம் ஆரம்பிக்கிறது.

5 முதல் 10 நாள்களில்தான் பெருமளவிலானோர் 'இரண்டாம் அலை' அறிகுறிகள் தென்படுகின்றன. அது தீவிரமாக இருக்கும். இரண்டாவது வார அறிகுறிகளை அலட்சியம் செய்வோரே தீவிர அறிகுறிகளோடு நிமோனியாவை போன்ற சிக்கல்களோடு வருவதாக மருத்துவர்கள் கருதுகின்றனர்.

மீளும் காலம்

அநேகருக்கு ஒரு வாரம் அல்லது பத்து நாள்கள் கழித்து அறிகுறிகள் குறைந்து மீளும் பாதையில் பயணிக்கின்றனர். குறைவான அல்லது மிதமான தொற்று கொண்டோருக்கே இது சாத்தியமாகிறது. தீவிர தொற்றுள்ளோருக்கு 5 முதல் 10 நாள்களில்தான் உண்மையான பிரச்னைகள் தோன்றுகின்றன. அந்நாள்கள் ஆரம்ப கட்டத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். சிலர் அறிகுறிகள் மறைந்து இயல்பு நிலைக்கு வந்துவிட்டதாக உணரும்போது இரண்டாம் கட்ட அறிகுறிகள் தெரிய ஆரம்பிப்பதாகவும் மருத்துவர்கள் கணித்துள்ளனர். மற்ற வைரஸ் தொற்றுகளைபோல் அல்லாமல் பரிசோதனைக்கு ஒரு வாரம் கழித்தே அறிகுறிகளை கண்காணிக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அவற்றை பொறுத்தே தொற்று மிதமானதா அல்லது தீவிரமானதா என்பதை அடையாளம் காண இயலும்.

அபாய கட்டத்தை சார்ந்தோர்

தொற்று இருந்தும் அதிக அறிகுறியில்லாதோர் அல்லது 10 நாள்களுக்குப் பிறகு அறிகுறிகள் மறைய தொடங்குவோர் நோயிலிருந்து மீள்வதாக எண்ணிக்கொள்ளலாம். அப்படியில்லாதோர் பின்விளைவுகளை சந்திக்க நேரும். தொற்று ஏற்பட்டு ஒரு வார காலத்திற்குப் பிறகு அறிகுறிகள் தீவிரமாவோர் முன்னர் உடல் நல பிரச்னைகள் உள்ளோராக இருப்பர். முதுமை, நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்னைகள் இருப்போருக்கும் இது நேரிடலாம். இளவயதினர் சிலருக்கு 12 முதல் 14 நாள்களுக்குப் பிறகு அறிகுறிகள் தீவிரமடைகின்றன.

மீளும் பாதை

கோவிட் பாதிப்பிலிருந்து மீள்வோருக்கு உடல் வலி, அசதி மற்றும் இருமல் பல நாள்கள் இருப்பதாக கூறப்படுகிறது. மூச்சுப் பிரச்னை, நெஞ்சுவலி, நெஞ்சில் கனமாக உணர்தல், குழப்பம், பிரமை உள்ளிட்டவையும் தோன்றுகிறது. பலருக்கு இரண்டாம் வாரத்தில் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு பெருமளவில் குறைகிறது. பலருக்கு காய்ச்சல் தொடர்ந்து இருக்கும். 9 அல்லது 10 நாள் கடந்தும் காய்ச்சல் குணமாகாவிட்டால் நிமோனியா அல்லது இரத்தத்தில் தொற்று போன்ற அறிகுறிகள் இருக்கக்கூடும்.

You'r reading கொரோனா பாதிப்பு: எந்த நாள்கள் முக்கியமானவை தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை