ஈரலை பாதுகாக்கிறது... இளநரையை தடுக்கிறது... கீரைகளின் ராணி

by SAM ASIR, Nov 12, 2020, 18:23 PM IST

கரிசலாங்கண்ணி கீரைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது. வெள்ளை கரிசலாங்கண்ணி மற்றும் மஞ்சள் கரிசலாங்கண்ணி என்று இதில் இருவகைகள் உள்ளன.இதில் புரதம், சுண்ணாம்புச் சத்து (கால்சியம்), இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் ஏ ஆகிய சத்துகள் உள்ளன.

கல்லீரலின் தோழி

'கீரைகளின் ராணி' என்றழைக்கப்படும் கரிசலாங்கண்ணி, நமது கல்லீரலுக்கு அதிக நன்மை செய்யக்கூடியது. இது பித்தநீர் சுரப்பை ஊக்குவிக்கிறது. அதன் காரணமாகச் செரிமானம் தூண்டப்படுகிறது. உடலிலிருக்கும் நச்சுப்பொருள்களை சிதைத்து வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம் ஈரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மது அருந்துகிறவர்களுக்கு ஈரல் பாதிப்படைகிறது. அந்த பாதிப்பிலிருந்து ஈரலை கரிசலாங்கண்ணி காக்கிறது. ஈரலில் ஏற்படும் அழற்சி மஞ்சள் காமாலைக்குக் காரணமாகிறது. மஞ்சள் காமாலை பாதிப்புள்ளோருக்கு கரிசலாங்கண்ணி சாறு 10 மில்லி லிட்டர் எடுத்து 1 கிராம் கறுப்பு மிளகு மற்றும் 3 கிராம் சர்க்கரை கலந்து தினமும் 3 வேளை, மூன்று முதல் ஐந்து நாள்கள் கொடுத்து வந்தால் பாதிப்பு குணமாகும் என்று கூறப்படுகிறது.

கூந்தல் பாதுகாப்பு

ஈரல் ஆரோக்கியமாக இருத்தல் ஹார்மோன்கள், கொழுப்புகள் ஆகியவற்றின் செயல்பாடு சரியாக நடைபெறுவதாலும், நச்சுக்கள் நீக்கப்படுவதாலும் கூந்தல் உதிராமல் பாதுகாக்கப்படுகிறது. கரிசலாங்கண்ணி சாற்றினை தலையில் மயிர்க்கால்களின் அடியில் பூசுவதன் மூலமும் கூந்தல் பாதுகாக்கப்படுகிறது. கரிசலாங்கண்ணி பொடியைத் தினமும் 1 முதல் 3 கிராம் சாப்பிடுவதால் கூந்தல் பலம் பெறும். இது இளநரையையும் தடுக்கிறது.

நாள்பட்ட காய்ச்சல்

செரிமான கோளாறு, பசியின்மை இவற்றுடன் காய்ச்சல் இருந்தால் ஈரல் அல்லது மண்ணீரல் பெரிதாகியிருக்கலாம். நாள்பட்ட காய்ச்சல் இருந்தால் 3 முதல் 5 மில்லி லிட்டர் கரிசலாங்கண்ணி சாற்றினை பாலுடன் சேர்த்து தினமும் இருவேளை 2 முதல் 3 வாரங்கள் அருந்தினால் பலன் கிடைக்கும்.

சளி இருமல்

கரிசலாங்கண்ணி சாற்றினை தேன் கலந்து எடுத்துக்கொள்வது சளியை அகற்றும். சளி அகற்றப்படுவதன் மூலம் நுரையீரல் சுத்தமாகிறது. நுரையீரலில் கோழை சேரவிடாமல் தடுத்து இருமல் மூலம் எல்லாவற்றையும் வெளியேற்றுகிறது.

ஆஸ்துமா

சிறுபிள்ளைகளுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் கரிசலாங்கண்ணி சாற்றுடன் சம அளவு தேன் சேர்த்து நாளுக்கு 3 அல்லது 4 முறை கொடுத்தால் இருமல், மூச்சிரைப்பு, நெஞ்சடைப்பு மாறும்.

மலத்தில் சளி

மலத்தில் கோழை வெளியேறுதல் செரிமான கோளாறையும், செரிமான மண்டலத்தில் நச்சுப்பொருள் இருப்பதையும் காட்டும் அடையாளம். வயிற்றுக்கோளாறு, பாக்டீரியா தொற்று, குடல் அழற்சி இவற்றை படிப்படியாகக் குணப்படுத்தக் கரிசலாங்கண்ணி உதவுகிறது.

நெஞ்செரிச்சல்

நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி, வாய் மற்றும் தொண்டையில் புளித்த சுவை ஆகியவை இருக்குமானால் கரிசலாங்கண்ணி பொடியைப் பழைய வெல்லத்துடன் கலந்து சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.

தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி

தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுவோர் கரிசலாங்கண்ணி சாற்றினை 3 முதல் 5 மில்லி லிட்டர் அளவு தினமும் மூன்று வேளை அருந்தவேண்டும்.
ஒற்றைத் தலைவலி இருந்தால் கரிசலாங்கண்ணி சாற்றுடன் ஆட்டுப்பாலைக் கலந்து காலை சூரிய உதயத்திற்கு முன்பு மூக்கின் ஒவ்வொரு துளையிலும் 2 முதல் 3 சொட்டு ஊற்றவும். சூரியன் உதித்தபிறகு தலைவலி அதிகரித்து சூரியன் மறைந்த பிறகு குறைந்தால் இம்முறை பலனளிக்கும்.

You'r reading ஈரலை பாதுகாக்கிறது... இளநரையை தடுக்கிறது... கீரைகளின் ராணி Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை