டெல்லி மாணவர் கன்யாகுமார் மீதான தேசத்துரோக வழக்கு - போலீசுக்கு நீதிமன்றம் கண்டனம்!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் கன்யாகுமார் மீதான தேசத்துரோக வழக்கில், சட்ட ஆலோசனை கேட்காமல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த டெல்லி போலீசுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் 2016-ம் ஆண்டு நடந்தது. போராட்டத்தின் போது பிரிவினையைத் தூண்டும் வகையில் கோஷமிட்டதாக மாணவர் சங்கத் தலைவர் கன்யாகுமார் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் இருந்ததால், ஜனவரி 19-ந் (இன்று) தேதிக்குள் தாக்கல் செய்ய டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால் கடந்த 14-ந் தேதி கன்யாகுமார் மற்றும் 2 பேர் மீது தேசத்துரோக வழக்கில் குற்றப்பத்திரிகையை டெல்லி போலீஸ் தாக்கல் செய்தது. இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில், சட்ட ஆலோசனை பெறாமல் தேசத்துரோக வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது எப்படி என்று சரமாரி கேள்வி கேட்டு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

தவறுக்கு மன்னிப்பு கேட்ட டெல்லி போலீசார் 10 நாளில் சட்ட ஆலோசனை பெறுவதாக உறுதி அளித்ததால் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

READ MORE ABOUT :