கணிப்புகள் பொய்யா, பா.ஜ.க. சதியா? குழப்பத்தில் மூழ்கிய எதிர்க்கட்சிகள்!

Will Mayawati and akilesh support bjp? opposition confused over Exit poll

by எஸ். எம். கணபதி, May 20, 2019, 16:59 PM IST

தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளில் எல்லா சேனல்களுமே பா.ஜ.க.வுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் என கூறியிருப்பதால், இதில் பா.ஜ.க. சதி எதுவும் இருக்குமோ என்று எதிர்க்கட்சிகள் குழப்பத்தில் மூழ்கியுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் கடைசி கட்டமாக 59 தொகுதிகளில் கடந்த மே 19ம் தேதி மாலை 6 மணி்க்கு வாக்குப்பதிவு முடிந்தது. அடுத்த அரை மணிநேரத்தில் அனைத்து சேனல்களும் தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளை ஒளிப்பரப்பின. மொத்தம் உள்ள 543ல் தேர்தல் நடக்காத வேலூரைத் தவிர மற்ற 542 தொகுதிகளிலுக்குமாக கணிப்புகள் வெளியிடப்பட்டன. அரை மணி நேரத்துக்கு முன்பு வாக்குப்பதிவு நடந்த 59 தொகுதிகளுக்கும் சேர்த்து கணிப்பு வெளியிடப்பட்டது எப்படி என்று தெரியவில்லை.
மேலும், எல்லா சேனல்களுமே பா.ஜ.க.வுக்கு அறுதி பெரும்பான்மை தேவையான 272ஐ விட அதிகமான இடங்கள் கிடைக்கும் என்று ஒரே குரலில் ஒலித்தன. அதிலும் சில சேனல்கள் பா,ஜ.க.வுக்கு 300க்கு மேல் போட்டன. அதே போல், காங்கிரசுக்கு அதிகபட்சமே 100 இடங்களும், மற்றவர்களுக்கும் 125 தான் கிடைக்கும் என்றும் தெரிவித்தன. இதனால், எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவருமே திகைத்து போய் விட்டனர்.

கடந்த 2014ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருந்தனர். அப்போது குஜராத்தை வளர்ந்த மாநிலமாக மாற்றியதாக மோடிக்கு ஆதரவான அலையும் இருந்தது. ஆனால், இப்போது அது தலைகீழாக மாறி விட்டது. இந்த தேர்தலில் தென்மாநிலங்களில் மோடிக்கு எதிரான அலை வீசியது. வடமாநிலங்களிலும் பா.ஜ.க.வுக்கு கடந்த முறை போல் பெரிய அலை எதுவும் வீசவில்லை. எனவே, கருத்து கணிப்புகள் எல்லாமே பா.ஜ.க.வின் மாய வேலையோ என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கருதுகின்றனர்.

மேலும், 2004ம் ஆண்டு தேர்தலில் மக்களிடம் வாஜ்பாய் அரசுக்கு எதிரான மனநிலை இருக்கவில்லை. அந்த தேர்தலின் போது, பிந்தைய கருத்து கணிப்புகளில் பா.ஜ.க. கூட்டணிக்கு 248 முதல் 290 தொகுதிகள் கிடைக்கும் என்றும், வாஜ்பாய் மீண்டும் பிரதமர் ஆவார் என்றும் கூறப்பட்டது. காங்கிரஸ் கூட்டணிக்கு 169 முதல் 190 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் மற்ற கட்சிகளுக்கு 98 முதல் 120 தொகுதிகள் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் அப்படியே மாறியிருந்தன. பா.ஜ.க. அணி 189, காங்கிரஸ் அணி 222, மற்றவை 132 இடங்கள் என்று வெற்றி பெற்றன. அப்போது காங்கிரஸ் தலைமையில் ஐ.மு.கூட்டணி அரசு அமைந்தது.

அதே போல், 2009ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜ.க. அணி 180 முதல் 197 இடங்கள் பெறும். காங்கிரஸ் 191 முதல் 216 இடங்களும், மற்றவை 136 முதல் 172 இடங்களும் பிடிக்கும் என கணிப்புகளில் கூறப்பட்டது. ஆனால், அந்த தேர்தலிலும் காங்கிரஸ் அணி 262 இடங்களை பெற்று ஆட்சியமைத்தது. பாஜக வெறும் 159, மற்றவை 79 தொகுதிகளைத்தான் பெற்றன.

எனவே, இந்த முறையும் காங்கிரஸ் அணியும், மூன்றாவது அணியும் கைகோர்த்தாலே பா.ஜ.க. அல்லாத ஆட்சியை அமைத்து விடலாம் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், இப்போது பா.ஜ.க.வுக்கு 300 இடங்கள் வரை கிடைக்கும் என்று அமித்ஷா சொன்னதையே அத்தனை சேனல்களும் கூறியிருப்பதால், எதிர்க்கட்சித் தலைவர்கள் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.

பா.ஜ.க.வுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று சொல்வதன் மூலம் டி.ஆர்.எஸ் தலைவர் சந்திரசேகர ராவ், பிஜேடி தலைவர் நவீன் பட்நாயக், ஒய்எஸ்ஆர் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரை எளிதில் இழுத்து மீண்டும் பா.ஜ.க.வே ஆட்சியமைக்கும் என்று காட்டலாம். அப்படி காட்டும் போது, காங்கிரஸ் பக்கமாக சாய்வதற்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் ஆகியோர் பயப்படுவார்கள். அதன்பிறகு, அவர்களின் ஆதரவையும் பெற்று எப்படியும் ஆட்சியமைக்கலாம் என்று பா.ஜ.க. கருதுகிறது. இதனால்தான், சந்திரபாபு நாயுடு எவ்வளவோ முயற்சித்து, மாயாவதி உள்ளிட்டோரை சந்தித்து பேசிய பிறகும், மாயாவதி இது வரை வாய் திறக்கவில்லை. சோனியாவை அவர் சந்திக்கப் போவதாக வந்த தகவலையும் பகுஜன் சமாஜ் மறுத்து விட்டது.

பகுஜன் சமாஜ் ஆதரவு தங்களுக்கு கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக பா.ஜ.க. இன்னொரு காயையும் நகர்த்தியுள்ளது. அதாவது, மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு, மைனாரிட்டி அரசாக மாறி விட்டதாக கூறி, சட்டசபையின் அவசரக் கூட்டத்தை கூட்டுமாறு கவர்னரிடம் மனு கொடுத்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் ஒருவரை காங்கிரஸ் இழுத்த போது, அந்த அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறப் போவதாக மாயாவதி மிரட்டல் விடுத்திருந்தார்.

பகுஜன் சமாஜ் ஒரு எம்.எல்.ஏ., சமாஜ்வாடி ஒரு எம்.எல்.ஏ, மற்றும் 4 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், கமல்நாத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இவர்களின் ஆதரவு இப்போது இல்லை என்று பா.ஜ.க. கவர்னரிடம் கூறியிருக்கிறது. இதன் மூலம், பகுஜன் மற்றும் சமாஜ்வாடியை இழுக்க பா.ஜ.க. பகீரதப்பிரயத்தனம் செய்வது தெளிவாக தெரிகிறது. இந்த சூழலில், எப்படியாவது பா.ஜ.க.அல்லாத அரசை அமைக்க வேண்டும் என்று வரிந்து கட்டிய சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, சோனியா காந்தி ஆகியோர் அது நடக்குமா என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அதே போல், மாயாவதி மற்றும் அகிலேஷ் ஆகியோர், பா.ஜ.க.வுக்கு ஆதரவு தருவதற்கு அதிகபட்சமாக 2 நிபந்தனைகள் வைக்கலாம். ஒன்று பிரதமராக மோடிக்கு பதில் வேறொருவரை நியமிக்க வேண்டும், 2வது மாயாவதிக்கு துணைப் பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பதவி தர வேண்டும் என்று கோரலாம். எனவே, இன்னும் 2 நாட்களில் இந்திய அரசியலில் பல பரபரப்புகளை காணலாம்.

காங். தலைமையில் அணி சேர்க்கும் பணியில் நாயுடு சுறுசுறுப்பு - 2-வது முறையாக ராகுலுடன் தீவிர ஆலோசனை!

You'r reading கணிப்புகள் பொய்யா, பா.ஜ.க. சதியா? குழப்பத்தில் மூழ்கிய எதிர்க்கட்சிகள்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை