மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி?

Maharashtra may be moving towards Presidents rule

by எஸ். எம். கணபதி, Nov 12, 2019, 10:58 AM IST

மகாராஷ்டிராவில் இழுபறி நீடித்து வருவதால் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

மகாராஷ்டிராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. ஆனால், பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும்தான் வெற்றி பெற்றன. தேர்தலுக்கு முன்பு தொகுதி உடன்பாட்டின் போது, சிவசேனாவுக்கு இரண்டரை ஆண்டு முதல்வர் பதவியை விட்டுத் தருவதாக பாஜக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தேர்தலுக்கு முன்பு பேசியபடி, தங்கள் கட்சிக்கு இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவி தரப்பட வேண்டுமென்று சிவசேனா பிடிவாதமாக கேட்டது. பாஜகவோ தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், முதல்வர் பதவியை விட்டுத் தர முடியாது என்று மறுத்து விட்டது.

இந்த இழுபறியில், பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவரான முன்னாள் முதல்வர் பட்நாவிஸை பதவியேற்க வருமாறு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். அவர் கவர்னரை சந்தித்து பாஜகவுக்கு மெஜாரிட்டி இல்லாததால், ஆட்சியமைக்க விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டார்.

இதன்பின், 2வது பெரிய கட்சியான சிவசேனாவுக்கு கவர்னர் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். நேற்று அதற்கான கெடுவும் முடிந்ததால், 3வது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரசுக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார். தேசியவாத காங்கிரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம், தேசியவாத காங்கிரசுக்கு முதல்வர் பதவியை கொடுத்து விட்டு ஆட்சியில் பங்கேற்க சிவசேனா விரும்புமா என்பது சந்தேகம்தான்.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி வருவதற்கான வாய்ப்புள்ளதாக சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி பி.பி.சவந்த் கூறுகையில், பாஜகவுக்கு கவர்னர் 17 நாட்கள் அவகாசம் அளித்தார். அதேசமயம் சிவசேனாவுக்கு 24 மணிநேரம்தான் கொடுத்தார். எல்லா கட்சிகளுக்கும் சமமான வாய்ப்பு தர வேண்டுமென்று எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுக்கும் போதிய வாய்ப்பு தரப்பட வேண்டும்என்றார்.

முன்னாள் அட்வகேட் ஜெனரல் ஸ்ரீஹரி அனேய் கூறுகையில், கடந்த சில நாட்களாக நடைபெறும் நிகழ்வுகளை பார்த்தால், சிவசேனா அல்லது தேசியவாத காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க முடியுமா என்பது சந்தேகமாக தெரிகிறது. ஒரு வேளை உடன்பாடு எட்டாமல் போனால், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படலாம். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பது தள்ளிப் போடப்படலாம். அது ஒரு பிரச்னை இல்லை. ஏனென்றால், தேர்தல் ஆணையம் முடிவுகளை அறிவித்தவுடனேயே புதிய சட்டசபை அமைந்து விட்டதாகவே அர்த்தம். எனவே, எம்.எல்.ஏக்கள் பதவியேற்பது எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம். அதே சமயம், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தினால் 2 மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என்றார்.

சிவசேனாவுக்கு முதல்வர் பதவியை விட்டுத் தர மாட்டேன் என்றுதான் பாஜக பிடிவாதமாக இருந்தது. எனவே, என்.சி.பி, காங்கிரஸ் ஆதரவில் சிவசேனாவை சேர்ந்த ஒருவர் முதல்வராக பதவியேற்பதையும் பாஜக விரும்பாது. அதனால்தான், சிவசேனாவுக்கு கவர்னர் ஒரு நாள் மட்டுமே அவகாசம் அளித்தார். தேசியவாத காங்கிரஸ் ஆட்சியமைவதையும் பாஜகவால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதே சமயம், தேர்தலை சந்திக்கவும் பாஜக விரும்பாது.

காரணம், சிவசேனா, பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிட வேண்டியிருக்கும். அப்போது, காங்கிரஸ்-என்.சி.பி. கூட்டணி இன்னும் அதிக இடங்களை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்படும். அந்த கூட்டணி ஆட்சியை பிடிக்கவும் வாய்ப்புள்ளது. இந்த சூழலில், ஜனாதிபதி ஆட்சியே அமல்படுத்தப்படும். அதன்பின், மீண்டும் சிவசேனாவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தும் என்று பேசப்படுகிறது.

You'r reading மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி? Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை