குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் திரிணாமுல் எம்.பி. மனு..
Trinamool Congress MP Mahua Moitra moves Supreme Court challenging the Citizenship Amendment Act
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மோயித்ரா, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த 2014க்கு முன்பு, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் இந்த புதிய குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்துக்கள், சீக்கியர்கள், பார்சி, பெளத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்கும் அதே நேரத்தில், முஸ்லிம்களுக்கு மட்டும் குடியுரிமை மறுப்பது சிறுபான்மையினருக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்து வாக்களித்தனர்.
இந்நிலையில், இந்த சட்டத்தை எதிர்த்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐ.யூ.எம்.எல்) கட்சி, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று(டிச.12) மனு தாக்கல் செய்திருக்கிறது. இதே போல், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யான மகுவா மோயித்ரா ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இம்மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டுமென்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் மோயித்ராவின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அதை தலைைம நீதிபதி பாப்டே ஏற்க மறுத்தார். எனவே, ஓரிரு நாட்களில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வரலாம் என தெரிகிறது.
You'r reading குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் திரிணாமுல் எம்.பி. மனு.. Originally posted on The Subeditor Tamil
More India News