ஜார்கண்டில் பாஜக முதல்வர் பின்னடைவு.. ஹேமந்த் சோரன் 2 இடத்திலும் முன்னிலை

by எஸ். எம். கணபதி, Dec 23, 2019, 13:35 PM IST

ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் ஜே.எம்.எம். கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார். முதல்வர் ரகுபர்தாஸ், ஜாம்ஷெட்பூரில் பின்தங்கியிருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் ரகுபர்தாஸ் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. தற்போது அங்கு சட்டமன்ற பொதுத் தேர்தல் 5 கட்டமாக நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 81 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இந்த தேர்தலில் பாஜக முதல் முறையாக போட்டியிட்டது. அதன் கூட்டணியில் இருந்த ஐக்கிய ஜனதாதளம்(ஜே.டி.யு), ஜார்கண்ட் மாணவர் சங்கம் (ஏ.ஜே.எஸ்.யு) ஆகியவை தனித்தனியே களமிறங்கின. ஜே.எம்.எம் கூட்டணியில் காங்கிரஸ், ஆர்.ஜே.டி ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன.

தற்போதைய நிலவரப்படி, ஜே.எம்.எம் - காங்கிரஸ் கூட்டணி 42 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஜே.எம்.எம். தலைவர் ஹேமந்த் சோரன் தான் போட்டியிட்ட தும்கா தொகுதியில் 2463 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவர் போட்டியிட்ட பர்ஹயத் தொகுதியிலும் 8616 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

முதல்வர் ரகுபர்தாஸ் தான் போட்டியிட்ட ஜாம்ஷெட்பூர் கிழக்கு தொகுதியில் பாஜக அதிருப்தி வேட்பாளர் சரயு ராயை விட 771 வாக்குகள் குறைந்து பின்தங்கியுள்ளார்.
ஏ.ஜே.எஸ்.யு கட்சித் தலைவர் சுதேஷ் மகதோ தான் போட்டியிட்ட சில்லி தொகுதியில் 10,400 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

மெஜாரிட்டிக்கு 41 இடங்களே தேவை என்ற நிலையில், தற்போது ஜே.எம்.எம். கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் சூழல் தெரிகிறது.

You'r reading ஜார்கண்டில் பாஜக முதல்வர் பின்னடைவு.. ஹேமந்த் சோரன் 2 இடத்திலும் முன்னிலை Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை