மத்தியப் பிரதேசத்தில் காங். அரசு தள்ளாட்டம்.. 20 அமைச்சர்கள் ராஜினாமா..

by எஸ். எம். கணபதி, Mar 10, 2020, 09:14 AM IST

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது. 20 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இன்று(மார்ச்10) மாலை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, கோவா, மணிப்பூர், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி, பாஜக ஆட்சியைக் கொண்டு வந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் விமர்சனங்கள் எழுந்தாலும், அதையெல்லாம் பிரதமர் மோடியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ பொருட்படுத்தவில்லை.

தற்போது, மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்கும் வேலையை பாஜக தொடங்கியுள்ளது. ம.பி.யில் மொத்தம் உள்ள 230 எம்.எல்.ஏ.க்களில் காங்கிரசுக்கு 113, பாஜகவுக்கு 107 எம்எல்ஏக்கள் உள்ளனர். 4 சுயேச்சைகள், 2 பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.க்கள், ஒரு சமாஜ்வாடி உறுப்பினர் 7 பேர் கமல்நாத் அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், வரும் 26ம் தேதி ம.பி.யில் 3 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், காங்கிரசுக்கு ஒரு இடமும், பாஜகவுக்கு ஒரு இடமும் எளிதாகக் கிடைக்கும். சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், சுயேச்சைகள் ஆதரவில் காங்கிரசுக்கு 2வது இடம் கிடைக்கும்.

தற்போது 2வது இடத்தை கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. மேலும், கமல்நாத் அரசைக் கவிழ்க்கவும் திட்டமிட்டது. இதற்காகக் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகள் என 8 எம்.எல்.ஏ.க்களை பாஜகவினர் கடத்தி விட்டதாகக் காங்கிரஸ் குற்றம்சாட்டியது. அதன்பிறகு, அந்த எம்.எல்.ஏ.க்களில் 4 பேர் திரும்பி விட்டதாகவும், அதனால் பாஜக கவிழ்ப்பு முயற்சியைத் தள்ளி வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாயின.

மேலும், ம.பி. காங்கிரசில் முக்கிய தலைவரான ஜோதிராதித்ய சிந்தியாவை பாஜக வளைத்து விட்டதாகவும், அவர் மூலம் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து விட்டு அவருக்குத் துணை முதல்வர் பதவி அல்லது மத்திய இணையமைச்சர் பதவி தருவதாக வாக்குறுதி தரப்பட்டதாகவும் பேசப்படுகிறது.

இந்நிலையில், ம.பி. முதல்வர் கமல்நாத் வீட்டிற்கு நேற்றிரவு அமைச்சர்கள் அனைவரும் வந்தனர். அவர்களிடம் கமல்நாத் ஆலோசனை நடத்தினார். பின்னர், 20 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இதைத் தொடர்ந்து, அமைச்சர் உமாங் சிங்கார், நிருபர்களிடம் கூறுகையில், 20 அமைச்சர்கள் விலகியுள்ளனர். கமல்நாத் அமைச்சரவையை மாற்றியமைப்பார். சிந்தியா இப்போதும் காங்கிரசில்தான் உள்ளார்என்றார்.

அமைச்சர் சஜ்ஜன்சிங் வர்மா கூறுகையில், பாஜக ஏற்படுத்தியுள்ள குழப்பத்தால், அமைச்சரவையை மாற்றியமைக்குமாறு முதல்வரிடம் கூறியிருக்கிறோம். பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்றார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜயசிங் கூறுகையில், சிந்தியாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் வரவில்லை. அவர் காங்கிரசில்தான் உள்ளார் என்றார்.

இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்குக் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், கமல்நாத்தே முதல்வராக நீடிப்பதா, சிந்தியாவை முதல்வராகத் தேர்வு செய்வதா என்று விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.

You'r reading மத்தியப் பிரதேசத்தில் காங். அரசு தள்ளாட்டம்.. 20 அமைச்சர்கள் ராஜினாமா.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை