மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் அரசு நாளை வாக்கெடுப்பு..

by எஸ். எம். கணபதி, Mar 15, 2020, 16:01 PM IST

மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு, சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் 26ம் தேதி அங்கு 3 ராஜ்யசபா எம்பி இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கிடையே, கமல்நாத் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக களம் இறங்கியது. காங்கிரசைச் சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக மாறினர். அவர்கள் பெங்களூருவில் உள்ள ஓட்டலுக்குச் சென்று தங்கினர். அவர்களை பாஜகவினர் கடத்தி விட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

இதன்பின், கமல்நாத் மீது அருப்தியில் இருந்த காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா திடீரென பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்துப் பேசினார். காங்கிரசில் இருந்து விலகிய அவர் பாஜகவில் சேர்ந்தார். அவருக்கு உடனடியாக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட சீட் தரப்பட்டது.

இதையடுத்து, பெங்களூருவில் தங்க வைக்கப்பட்டிருந்த 22 காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாகவும், காங்கிரசில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தனர். அவர்களின் ராஜினாமா கடிதங்களை பாஜக தலைவர்கள் கொண்டு வந்து சபாநாயகர் பிரஜாபதியிடம் அளித்தனர். இதைப் பெற்ற சபாநாயகர், அந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அதில், அவர்கள் விருப்பப்பட்டு ராஜினாமா செய்கிறார்களா அல்லது யாருடைய நிர்ப்பந்தத்தின் பேரில் விலகுகிறார்களா என்று கேட்டு, அதற்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கூறியுள்ளார்.

அதே சமயம், அந்த 22 பேரில் 6 அமைச்சர்களும் இருந்தனர். அவர்களை கமல்நாத் பதவிநீக்கம் செய்தார். அதைத் தொடர்ந்து, சபாநாயகர் பிரஜாபதி, அந்த 6 பேரின் ராஜினாமா கடிதங்களை மட்டும் ஏற்றுக் கொண்டு, எம்.எல்.ஏ. பதவியையும் பறித்தார்.

இந்த சூழ்நிலையில், சட்டசபையில் நாளை(மார்ச்16) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு கமல்நாத் அரசுக்கு கவர்னர் லால்ஜி டாண்டன் உத்தரவு பிறப்பித்தார். முன்னதாக, காங்கிரசின் 22 அதிருப்தி எம்.எல்.ஏக்களைத் தவிர மற்ற எம்.எல்.ஏ.க்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இன்று அங்கிருந்து புறப்பட்டு போபாலுக்கு வந்தனர். நாளை சட்டசபைக்குச் செல்வதற்காக அவர்கள் திரும்பி விட்டனர்.

அதே சமயம், பாஜகவின் பிடியில் பெங்களூரு ரிசார்ட்டில் உள்ள காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நாளை சட்டசபைக்கு வருவார்களா என்பது சந்தேகமாக உள்ளது. மேலும், மத்தியப் பிரதேசத்தில் நாளை கமல்நாத் அரசு கவிழுமா, அல்லது மேஜிக் நம்பரை கமல்நாத் எட்டி விடுவாரா என்ற அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You'r reading மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் அரசு நாளை வாக்கெடுப்பு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை