சபாநாயகர் அதிகாரத்தில் கவர்னர் குறுக்கிட முடியாது.. சுப்ரீம் கோர்ட்டில் காங். வாதம்..

Governor cannot override speakers power

by எஸ். எம். கணபதி, Mar 19, 2020, 11:10 AM IST

சபாநாயகரின் அதிகாரத்தில் கவர்னர் குறுக்கிட முடியாது என்று ம.பி. காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வாதாடப்பட்டது.

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் 26ம் தேதி அங்கு 3 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக, கமல்நாத் ஆட்சியைக் கவிழ்க்கும் வேலையில் பாஜக இறங்கியது.

காங்கிரசில் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஆதரவாக இருந்த 22 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி எம்.எல்.ஏக்களாக மாறினர். அவர்களை பாஜகவினர் அழைத்துச் சென்று, பாஜக ஆளும் கர்நாடகாவில் ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளனர். அந்த காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதம் எழுதி, பாஜகவினரிடம் கொடுத்தனர். அந்த ராஜினாமா கடிதங்களை ம.பி. பாஜக தலைவர்கள் வாங்கிச் சென்று சபாநாயகர் பிரஜாபதியிடம் அளித்தனர்.

அந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் அமைச்சர்களாக இருந்த 6 பேரை முதலமைச்சர் கமல்நாத் பதவிநீக்கம் செய்தார். இதையடுத்து, அந்த 6 பேரின் ராஜினாமாக்களை மட்டும் ஏற்று, அவர்களின் எம்.எல்.ஏ. பதவியையும் சபாநாயகர் பிரஜாபதி பறித்தார்.
அதே சமயம், மற்ற அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சம்மன் அனுப்பினார். நீங்கள் விருப்பப்பட்டு ராஜினாமா செய்தீர்களா என்பதை நேரில் ஆஜராகி விளக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். ஆனால், அந்த எம்.எல்.ஏ.க்கள் கர்நாடகாவில் இருந்து திரும்பவில்லை.

இந்த சூழலில், கமல்நாத் அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டதாக பாஜக புகார் அளித்தது. இதனால், கமல்நாத் அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று கவர்னர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டார். ஆனால், சட்டசபையில் கவர்னர் உரை முடிந்ததும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் சபையைச் சபாநாயகர் ஒத்தி வைத்தார். கொரோனா வைரஸ் நோயைக் காரணம் காட்டி வரும் 26ம் தேதிக்குச் சட்டசபையை ஒத்தி வைத்தார்.

இதையடுத்து, கமல்நாத் அரசு உடனடியாக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி, முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் உள்பட 10 பாஜக எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர். அதில், சபாநாயகர் சட்டசபையை 26ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதால், பெரிய அளவில் குதிரைப் பேரம் நடப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த மனு, நீதிபதிகள் சந்திரசூட், ஹேமந்த் குப்தா ஆகியோர் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சார்பில் சீனியர் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜராகி வாதாடியதாவது:
மத்தியப் பிரதேசத்தில் மக்கள் வாக்களித்து மெஜாரிட்டி இடங்களுடன் கமல்நாத் ஆட்சி அமைத்தார். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்து 18 மாதங்களாக எந்த பிரச்சினையும் இல்லாமல் ஆட்சி நடைபெற்று வந்தது. தற்போது ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளையே தகர்க்கும் வகையில் பாஜகவினர் செயல்படுகின்றனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 22 பேரை பாஜகவினர் தனி விமானங்களில் கடத்திச் சென்று பெங்களூரு ரிசார்ட்டில் தங்க வைத்திருக்கிறார்கள். அவர்கள் வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ராஜினாமா கடிதங்களை பாஜக தலைவர்கள், ஹோலிப் பண்டிகையன்று சபாநாயகரின் வீட்டில் கொடுத்தனர். இதிலிருந்தே அவர்களின் செயல்பாடுகள் நன்கு புரியும்.

சட்டசபையைப் பொறுத்தவரைச் சபாநாயகரின் முடிவே இறுதியானது. சட்டசபையை உடனே கூட்டுங்கள் என்று சபாநாயகருக்கோ, முதலமைச்சருக்கோ இரவு நேரத்தில் கவர்னர் உத்தரவிட முடியாது. கவர்னருக்கு அந்த அதிகாரம் கிடையாது.

22 எம்.எல்.ஏ.க்களில் அமைச்சர்களாக இருந்த 6 பேரின் ராஜினாமா ஏற்கப்பட்டது. மற்ற 16 பேரின் ராஜினாமாக்களைச் சபாநாயகர் இன்னும் ஏற்கவில்லை. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற அந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வரச் சொல்லுங்கள். அதற்குப் பிறகு கமல்நாத் அரசை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தச் சொல்லலாம். அப்போதுதான் மக்களின் முடிவு தெரியும்.
இவ்வாறு தவே வாதாடினார்.

You'r reading சபாநாயகர் அதிகாரத்தில் கவர்னர் குறுக்கிட முடியாது.. சுப்ரீம் கோர்ட்டில் காங். வாதம்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை