மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு பிழைக்குமா? கமல்நாத் ராஜினாமா?

by எஸ். எம். கணபதி, Mar 20, 2020, 12:29 PM IST

மத்தியப் பிரதேசத்தில் இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டிய நிலையில், கமல்நாத் அரசு கவிழ்வது உறுதியாகி விட்டது. வாக்கெடுப்பு நடத்தாமலேயே அவர் ராஜினாமா செய்வார் எனத் தெரிகிறது.

மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் 26ம் தேதி அங்கு 3 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக கமல்நாத் ஆட்சியைக் கவிழ்க்கும் வேலையில் பாஜக இறங்கியது.

காங்கிரசில் கமல்நாத்துடன் மோதிக் கொண்டிருந்த இளம்தலைவர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு தனக்கு ஆதரவான 22 எம்.எல்.ஏ.க்களை அதிருப்தி எம்.எல்.ஏக்களாக ஆட்சிக்கு எதிராக மாற்றினார். அவர்களை பாஜகவினர் அழைத்துச் சென்று, பாஜக ஆளும் கர்நாடகாவில் உள்ள பெங்களூருவில் ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளனர்.
பின்னர், சிந்தியா பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசிவிட்டு, பாஜகவில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 22 பேரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாகக் கடிதம் கொடுத்தனர். அவர்களின் ராஜினாமா கடிதங்களை ம.பி. பாஜக தலைவர்கள் வாங்கிச் சென்று சபாநாயகர் பிரஜாபதியிடம் அளித்தனர்.

அந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்களில் அமைச்சர்களாக இருந்த 6 பேரை முதலமைச்சர் கமல்நாத் பதவிநீக்கம் செய்தார். இதையடுத்து, அந்த 6 பேரின் ராஜினாமாக்களை மட்டும் ஏற்று, எம்.எல்.ஏ. பதவியையும் சபாநாயகர் பிரஜாபதி பறித்தார். அதே சமயம், மற்ற அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சம்மன் அனுப்பினார். நீங்கள் விருப்பப்பட்டு ராஜினாமா செய்தீர்களா என்பதை நேரில் ஆஜராகி விளக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். ஆனால், அந்த எம்.எல்.ஏ.க்கள் கர்நாடகாவில் இருந்து திரும்பவில்லை.

இந்த சூழலில், கமல்நாத் அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டதாக பாஜக புகார் அளித்தது. இதனால், கமல்நாத் அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று கவர்னர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டார். ஆனால், சட்டசபையில் கவர்னர் உரை முடிந்ததும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமல் சபையைச் சபாநாயகர் ஒத்தி வைத்தார். கொரோனா வைரஸ் நோயைக் காரணம் காட்டி வரும் 26ம் தேதிக்குச் சட்டசபையை ஒத்தி வைத்தார்.

இதையடுத்து, கமல்நாத் அரசு உடனடியாக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டுமெனக் கோரி, முன்னாள் முதல்வர் சிவராஜ் சவுகான் உள்பட 10 பாஜக எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி சந்திரசூட் அமர்வு, ம.பி. சட்டசபையில் இன்று மாலை 5 மணிக்குள் கமல்நாத் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.

இந்நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேரின் ராஜினாமாவையும் சபாநாயகர் பிரஜாபதி ஏற்றுக் கொண்டார். மேலும், பாஜக எம்.எல்.ஏ. சரத்கோல் ராஜினாமாவையும் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, சட்டசபையில் காங்கிரசின் பலம் 114ல் இருந்து 92 ஆகக் குறைந்தது. மேலும், 4 சுயேச்சைகள், பகுஜன்சமாஜ் 2, சமாஜ்வாடி ஒருவர் என 7 பேரைச் சேர்த்தாலும் பலம் 99தான் வரும். அதே சமயம், பாஜக 107 உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது.

இதனால், காங்கிரஸ் ஆட்சி கவிழ்வது உறுதியாகி விட்டது. எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலேயே முதல்வர் பதவியை கமல்நாத் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு பிழைக்குமா? கமல்நாத் ராஜினாமா? Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை