காஷ்மீர் முதல் குமரி வரை.. இந்தியாவில் முழு ஊரடங்கு..

by எஸ். எம். கணபதி, Mar 22, 2020, 12:18 PM IST

இந்தியாவில் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்றுக் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இன்று(மார்ச்22) மக்கள் சுய ஊரடங்கு நடைபெறுகிறது.

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் 175 நாடுகளில் பரவியுள்ளது. இது வரை 3 லட்சத்து 8,215 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களில் ஒரு லட்சம் பேர் குணமடைந்திருக்கிறார்கள். 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 275க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நூற்றுக்கணக்கானோர் தனி வார்டுகளில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த சூழலில், இன்று மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மக்கள் தாங்களாகவே ஊரடங்கு பின்பற்ற வேண்டும். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. மாலை 5 மணிக்கு மக்கள் தங்கள் வீட்டு மொட்டை மாடி அல்லது பால்கனியில் இருந்து 5 நிமிடம் கைதட்டி அல்லது மணி அடித்து, மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றியை வெளிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
இதையடுத்து, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலுமாக நாடு முழுவதும் ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. லாரிகள் வேலை நிறுத்தம், தொழிற்சங்க வேலை நிறுத்தம், எதிர்க்கட்சிகள் வேலை நிறுத்தம் போன்ற முழு அடைப்பு(பந்த்) நாட்களில் கூட, பல இடங்களில் சிறிது வாகனப் போக்குவரத்து இருக்கும். சில கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறந்திருப்பதைப் பார்க்கலாம்.
தமிழகத்தில் ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள், காய்கறி, மளிகைக் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பஸ், ஆட்டோ, லாரி உள்படப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அதே சமயம், பால் விற்பனை, அம்மா உணவகங்கள், பெட்ரோல் நிலையங்கள் வழக்கம் போல் செயல்படுகின்றன.

You'r reading காஷ்மீர் முதல் குமரி வரை.. இந்தியாவில் முழு ஊரடங்கு.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை