ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி செப்.19ம் தேதி தொடக்கம்..

IPL likely to begin from September 19th.

by எஸ். எம். கணபதி, Jul 24, 2020, 10:38 AM IST

இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் வரும் செப்டம்பர் 19ம் தேதி தொடங்கி, நவம்பர் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது.இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) கிரிக்கெட் போட்டிகள் கடந்த மார்ச் 29ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா நோய் பரவல் காரணமாக இது தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, பல நாடுகளில் கொரோனா பரவியிருப்பதால், இந்த ஆண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இப்போது டி20 போட்டிகள் நடைபெறாததால், அந்த காலத்தைப் பயன்படுத்தி ஐ.பி.எல். போட்டிகளை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம்(பிசிசிஐ) தீர்மானித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் கொரோனா தொற்று பெரிய அளவில் பாதிக்காததால், அங்குப் போட்டிகளை நடத்துவதற்கு அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. துபாய், அபுதாபி, ஷார்ஜா நகரங்களில் போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது.இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், ஐபிஎல் போட்டிகளை செப்.19ல் தொடங்கி, நவ.8 வரை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 51 நாட்களில் இந்த போட்டிகள் நடைபெறும். போட்டிக்கான அட்டவணை குறித்து முடிவு செய்வதற்கு பிசிசிஐ நிர்வாகக் குழு விரைவில் கூடும் என்று தெரிவித்தார்.

You'r reading ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி செப்.19ம் தேதி தொடக்கம்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை