இந்தி தெரியாதவர்களை வெளியேறச் சொல்வதா? தமிழக கட்சிகள் கொதிப்பு..

All parties condemn ayush secretary for insulting tamilnadu doctors.

by எஸ். எம். கணபதி, Aug 23, 2020, 10:05 AM IST

இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்ற ஆயுஷ் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்குத் தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பணியாற்றும் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான 3 நாட்கள் இணையவழி புத்தாக்கப் பயிற்சி முகாமை மத்திய ஆயுஷ் அமைச்சகம் நடத்தியது. தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, 37 மருத்துவர்கள் இதில் பங்கேற்றனர். நாடு முழுவதுமாக சுமார் 400 மருத்துவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர்.

பயிற்சியாளர்கள் இந்தி மொழியில் மட்டுமே வகுப்புகளை நடத்தியதால், தென்மாநிலங்களைச் சேர்ந்த இந்தி தெரியாத டாக்டர்களுக்கு புரியவில்லை. இதனால், பயிற்சிகளை ஆங்கிலத்தில் நடத்துமாறு தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள், ஆயுஷ் அமைச்சகத்துக்கு இமெயிலில் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவர்கள் பதிலளிக்கவும் இல்லை. மூன்றாவது நாள் வகுப்பை ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்ய ராஜேஷ் கொடேச்சா நடத்தியுள்ளார். அவரும் இந்தியிலேயே பேசியதால், அவரிடம் ஆங்கிலத்தில் பேசுமாறு டாக்டர்கள் கூறினர். அப்போது அவர் தனக்குச் சரளமாக ஆங்கிலம் பேச தெரியாதென்றும், அதனால், இந்தி புரியாதவர்கள் பயிற்சியில் இருந்து வெளியேறலாம் என்று மிரட்டலாகக் கூறியுள்ளார். இதற்குப் பிறகு, ஆங்கிலத்தில் பேசுமாறு அவரிடம் சத்தம் போட்ட டாக்டர்கள் யார்,யார் என்று மாநில அரசுகளிடம் விசாரித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப் போவதாக அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இது பற்றிய செய்தி வெளியானதும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பா.ம.க.நிறுவனர் ராமதாஸ், இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு தமது கண்டனத்தைப் பதிவு செய்து தமிழக அரசு கடிதம் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.திமுக எம்.பி. கனிமொழி, மத்திய அரசு தொடர்ந்து இந்தி திணிப்பில் ஈடுபட்டு வருவதையே இது காட்டுகிறது. அந்த ஆயுஷ் துறை செயலாளரை சஸ்பெண்ட் செய்து, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், மார்க்சிஸ்ட் மற்றும் இடது கம்யூனிஸ்ட் கட்சியினர், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்பட அனைத்து கட்சியினருமே மத்திய ஆயுஷ் செயலாளருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

You'r reading இந்தி தெரியாதவர்களை வெளியேறச் சொல்வதா? தமிழக கட்சிகள் கொதிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை