பீகாரில் லாலு மகன் ஹெலிகாப்டரை சுற்றி அலைமோதிய கூட்டம்.. கொரோனா விதிகள் மீறல்..

by எஸ். எம். கணபதி, Oct 30, 2020, 10:24 AM IST

பீகாரில் ஆர்.ஜே.டி கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் வந்திறங்கிய ஹெலிகாப்டரை சுற்றி, ஏராளமான மக்கள் கூடினர். கொரோனா விதிமுறைகளை மீறி மக்கள் கூட்டத்தை அனுமதித்தது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து, அம்மாநிலத்தில் அக்டோபர் 28ம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, முதல் கட்டமாக 71 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது.அம்மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக மற்றும் சிறிய கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. ராம்விலாஸ் பஸ்வானுடைய லோக்ஜனசக்தி கட்சி இந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டது.

ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்குப் பிறகு, அவரது மகன் சிராக் பஸ்வான் கட்சியை நடத்தி வருகிறார். அவர் கூட்டணியை விட்டு விலகி விட்டாலும், பாஜகவைத் தொடர்ந்து ஆதரிக்கிறார். அவரது லோக்ஜனசக்தி, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பாஜக தொகுதிகளில் அந்தக் கட்சிக்கு ஆதரவாக உள்ளது. இதற்கிடையே, லாலுபிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதாதளம்(ஆர்ஜேடி), காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணியை உருவாக்கிப் போட்டியிடுகின்றன. அந்த கூட்டணி, லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

பீகாரில் வேலைவாய்ப்புகள் வெளிமாநிலங்களுக்குச் சென்றவர்கள், கொரோனா காலத்தில் ஊர் திரும்ப முடியாமல் ஆயிரம் கி.மீ. தூரம் வரை எல்லாம் நடந்தே வந்தனர். இதனால் நிதிஷ்குமார் அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில், தேஜஸ்வி யாதவ் பிரச்சாரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தேஜஸ்வி பிரச்சாரத்திற்கு ஹெலிகாப்டரில் சென்ற போது, அவரை இறங்க விடாமல் இளைஞர் கூட்டம் சுற்றியது. அதன்பிறகு, கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை விலக்கி விட்டு, அவரை அழைத்துச் சென்றனர்.இந்த வீடியோவை கட்சியின் மூத்த நிர்வாகி சஞ்சய் யாதவ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர், எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவ், ஒய் பிளஸ் பாதுகாப்பு பட்டியலில் இருக்கிறார். அவரது தேர்தல் பிரச்சாரங்களில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. அவருக்கு முறையான பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆனால், நிதிஷ்குமார் அரசு திட்டமிட்டு, பாதுகாப்பு அளிக்க மறுக்கிறது. இது தொடர்பாக, கட்சியின் மூத்த தலைவர் மனோஜ் குமார் ஜா ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்குப் புகாரும் கொடுத்து விட்டார். இருந்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை இந்த வீடியோவைப் பார்த்தாலே புரியும் என்று கூறியிருக்கிறார். மேலும், தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகாரையும் பதிவிட்டிருக்கிறார்.

You'r reading பீகாரில் லாலு மகன் ஹெலிகாப்டரை சுற்றி அலைமோதிய கூட்டம்.. கொரோனா விதிகள் மீறல்.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை