போதைப்பொருள் கடத்தல் வழக்கு கேரள சிபிஎம் மாநில செயலாளரின் வீட்டில் அதிரடி சோதனை.

by Nishanth, Nov 4, 2020, 12:09 PM IST

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பெங்களூரு மத்திய அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள கேரள மாநில சிபிஎம் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷின் திருவனந்தபுரத்திலுள்ள வீட்டில் இன்று அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநில சிபிஎம் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷை கடந்த வாரம் பெங்களூரு மத்திய அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன் பெங்களூருவில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முஹம்மது அனூப் மற்றும் ரவீந்திரன் ஆகியோருக்கு பண உதவி செய்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டார்.

தற்போது இவர் பெங்களூரு மத்திய அமலாக்கத் துறையின் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். விசாரணைக்கு பினீஷ் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்காவிட்டாலும், அவருக்கு எதிராக பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் பல்வேறு இடங்களில் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் இருப்பதும், பலருடன் சேர்ந்து ஏராளமான தொழில்களில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது. கடந்த 7 வருடங்களில் இவர் தனக்கு கிடைத்த வருமானத்திற்கு உரிய வருமான வரி கட்டவில்லை என்றும் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த ஒரு சில வருடங்களில் 5 கோடிக்கு மேல் பணம் இவரது வங்கி கணக்கில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்துமே கருப்பு பணமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் மத்திய அமலாக்கத் துறைக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கேரளாவில் அவர் நடத்திவரும் தொழில்கள் குறித்து விசாரணை நடத்த மத்திய அமலாக்கத் துறை தீர்மானித்தது.

மேலும் அவரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக நேற்று பெங்களூருவில் இருந்து மத்திய அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையினர் திருவனந்தபுரத்திற்கு விரைந்தனர். இன்று காலை முதல் திருவனந்தபுரத்திலுள்ள பினீஷின் வீட்டில் பெங்களூரு மத்திய அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனை நடைபெறும்போது கர்நாடக போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீசார் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கேரள போலீசாருக்கு இது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீட்டில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை கேரள சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

மகன் கைது செய்யப்பட்ட விவரம் கிடைத்தவுடன் உடனடியாக அவர் திருவனந்தபுரத்திலுள்ள சிபிஎம் கட்சி அலுவலத்திற்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புக்கு மாறிவிட்டார். இன்று காலை 10 மணி முதல் இந்த வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் பினீஷ் நடத்தி வரும் பல்வேறு நிறுவனங்களிலும் சோதனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கேரள மாநில சிபிஎம் செயலாளரின் வீட்டில் பெங்களூரு மத்திய அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading போதைப்பொருள் கடத்தல் வழக்கு கேரள சிபிஎம் மாநில செயலாளரின் வீட்டில் அதிரடி சோதனை. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை