கேரள அரசுக்கு அடுத்த சிக்கல் முதல்வரின் மேலும் ஒரு செயலாளரிடமும் விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு

by Nishanth, Nov 5, 2020, 16:16 PM IST

கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்குச் சோதனை மேல் சோதனை வந்து கொண்டிருக்கிறது. முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், பினராயி விஜயனின் கூடுதல் தனி செயலாளரிடமும் விசாரணை நடத்த மத்திய அமலாக்கத் துறை தீர்மானித்துள்ளது. நாளை கொச்சியில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் என்று வெளிச்சத்திற்கு வந்ததோ அன்று முதல் கேரள அரசுக்கு போதாத காலம் என்றே கூறவேண்டும். இந்த சம்பவத்தில் அமீரக தூதரகத்தில் துணைத் தூதரின் நிர்வாக செயலாளராக இருந்த ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருடன் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து கடந்த வாரம் சிவசங்கரை மத்திய அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். சிவசங்கர் உள்பட இதுவரை கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கும்பல் தங்கக் கடத்தலில் மட்டுமில்லாமல், கேரள அரசின் பல்வேறு திட்டங்களிலும் ஊழல் செய்தது தெரியவந்தது.கேரள அரசு குறைந்த கட்டணத்தில் அனைவருக்கும் இன்டர்நெட் வசதி கொடுக்கும் கே போன் என்ற திட்டத்தைச் செயல்படுத்தத் தீர்மானித்துள்ளது. இதேபோல ஏழைகளுக்கு இலவசமாக வீடு கட்டிக்கொடுக்கும் லைஃப் மிஷன் என்ற திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த இரு திட்டங்கள் உள்பட மேலும் பல்வேறு திட்டங்களில் சிவசங்கரும், ஸ்வப்னாவும் சேர்ந்து பல கோடி கமிஷன் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக சிவசங்கரிடம் மத்திய அமலாக்கத் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 7 நாள் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து இன்று சிவசங்கரை அமலாக்கத் துறையினர் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, சிவசங்கர் கேரள அரசின் பல்வேறு திட்டங்களில் கமிஷன் வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் அவரிடம் கூடுதல் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. எனவே மேலும் 10 நாள் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பரிசீலித்த நீதிமன்றம் வரும் 11ம் தேதி வரை சிவசங்கரை காவலில் விசாரிக்க அனுமதி அளித்தது.

இதற்கிடையே தங்கக் கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகத்திலுள்ள மேலும் 2 முக்கிய அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாகவும், அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவலை முதல்வர் பினராயி விஜயன் மறுத்து வந்தார். இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலாளராக இருக்கும் ரவீந்திரனை நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி மத்திய அமலாக்கத் துறை நோட்டீஸ் கொடுத்துள்ளது. நாளை காலை 10 மணிக்குக் கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவசங்கர் நடத்திய மோசடிகள் குறித்து ரவீந்திரனுக்கு தெரியும் என மத்திய அமலாக்கத் துறை நம்புகிறது. இது தொடர்பாக விசாரிக்கவே ரவீந்திரனை அமலாக்கத்துறை அழைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிவசங்கருக்கு அடுத்தபடியாக முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகத்திலுள்ள மேலும் ஒரு முக்கிய அதிகாரி விசாரணைக்கு அழைக்கப்பட்டிருப்பது கேரள அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading கேரள அரசுக்கு அடுத்த சிக்கல் முதல்வரின் மேலும் ஒரு செயலாளரிடமும் விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை