பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி வெற்றி.. நள்ளிரவில் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு..

by எஸ். எம். கணபதி, Nov 11, 2020, 09:19 AM IST

பீகாரில் மீண்டும் ஐக்கியஜனதா தளம்- பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. எனினும், ஐக்கிய ஜனதா தளத்தை விட பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்(ஜேடியு)-பாஜக கூட்டணி ஆட்சி பதவிக்காலம் முடிந்தது. அம்மாநிலத்தில் கடந்த அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7ம் தேதிகளில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது.

ஆளும் ஐக்கிய ஜனதாதளம்-பாஜக மற்றும் விவகாஷ்சீல் இன்சான் பார்ட்டி(விஐபி), இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா(ஹெச்ஏஎம்) உள்ளிட்ட சிறிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. சிராக் பஸ்வானுடைய லோக்ஜனசக்தி கட்சி இந்த கூட்டணியில் இருந்து விலகியது. ஆனால், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தி, பாஜக போட்டியிடும் தொகுதிகளில் அந்தக் கட்சிக்கு ஆதரவு அளித்தது.

லாலுபிரசாத் யாதவின் ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்(எம்.எல்), சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கிப் போட்டியிட்டன. அந்த கூட்டணி, லாலுவின் மகனும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக நிறுத்திப் போட்டியிட்டன. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் ஆர்ஜேடி-காங்கிரஸ் மெகா கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியிருந்தன. பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளன. மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 55 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு, நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆரம்பத்தில் பல இடங்களிலும் மெகா கூட்டணி வேட்பாளர்களே முன்னிலை பெற்றனர்.

காலை 11 மணிக்கு மேல் ஐக்கிய ஜனதாதளம்- பாஜக கூட்டணி பல இடங்களில் முன்னிலை பெற்றன. மாலையில் பாஜக அதிக இடங்களில் முன்னிலை பெறத் தொடங்கியது. இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடந்துள்ளதாக மெகா கூட்டணி குற்றம்சாட்டியது. எனினும், இரு கூட்டணிகளுக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் நீண்ட இழுபறி நீடித்து வந்தது.இரவு 11 மணியளவில் ஆர்ஜேடி மூத்த தலைவர் மனோஜ் ஜா ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில் 119 தொகுதிகளில் அந்த கூட்டணி வெற்றி பெற்றதாகவும், அதைத் தேர்தல் அதிகாரிகள் அறிவிக்காமல் பாஜக கூட்டணியை வெற்றி பெறவைக்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுகளைப் பொருட்படுத்தாமல், நள்ளிரவு 1.30 மணியளவில் தேர்தல் ஆணைம் இறுதி முடிவுகளை வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:என்டிஏ அணி : பாஜக 74, ஐக்கிய ஜனதா தளம் 43, விஐபி 4, ஹெச்ஏஎம் 4 என்று மொத்தம் 125 தொகுதிகளில் வென்றுள்ளது.மெகா கூட்டணி :ஆர்ஜேடி 75, காங்கிரஸ் 19, கம்யூ.(எம்.எல்) 12, சிபிஐ 2, சிபிஎம் 2 என்று மொத்தம் 110 தொகுதிகளில் வென்றுள்ளது.லோக்ஜனசக்தி மற்றும் சுயேச்சை தலா ஒரு தொகுதிகளில் வென்றுள்ளன. பாஜக மொத்தம் 110 தொகுதிகளில் போட்டியிட்டு பாஜக 74 தொகுதிகளில் வென்றிருக்கிறது. ஜேடியு 115 தொகுதிகளில் போட்டியிட்டு 43 தொகுதிகளில் வென்றிருக்கிறது. 11 தொகுதிகளில் போட்டியிட்ட விஐபி 4 இடங்களிலும், 7 தொகுதிகளில் போட்டியிட்ட ஹெச்ஏஎம் 4 இடங்களிலும் வென்றுள்ளன.

தேர்தலுக்குப் பின் வெளியான 8 பிந்தைய கருத்துக் கணிப்புகளில் 6ல் மெகா கூட்டணிக்கு மெஜாரிட்டி கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இதனால், தேஜஸ்வி யாதவ்தான் முதல்வர் ஆவார் என்று அவரது கட்சித் தொண்டர்கள், முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் என்று போஸ்டர்களை ஒட்டினர். ஆனால், நேற்றிரவு நிலைமை தலைகீழாக மாறி விட்டது.பீகார் தேர்தல் முடிவுகளை அடுத்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பாஜக தில்லுமுல்லு செய்வதாக மீண்டும் குற்றம்சாட்டியுள்ளன. தேர்தல் கமிஷனும் வழக்கம் போல் இயந்திரத்தில் எந்த முறைகேடும் செய்ய முடியாது என்று பதிலளித்துள்ளது.

You'r reading பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி வெற்றி.. நள்ளிரவில் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை