தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு 2 ஆயிரமாக சரிவு.. சிகிச்சையில் 18 ஆயிரம் பேர்..

by எஸ். எம். கணபதி, Nov 11, 2020, 09:10 AM IST

சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மட்டுமே நேற்று நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் 85 லட்சம் பேருக்குப் பாதித்தது. இன்னும் நோய் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது.

அதற்குப் பின்பு படிப்படியாகக் குறையத் தொடங்கி, தினமும் புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் குறைந்து தற்போது 2 ஆயிரத்துக்கு வந்துள்ளது.நேற்று(நவ.10) 75 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 2146 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 48,225 பேராக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 2237 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 18,129 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 25 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 11,387 ஆக அதிகரித்துள்ளது.சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைந்தவர்களுக்கே பாதிப்பு கண்டறியப்பட்டது. மாநிலம் முழுவதும் தற்போது 18,709 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் கடந்த அக்டோபர் மாதத்தில் தினமும் சுமார் 1800 பேர் வரை பாதிக்கப்பட்டு வந்தனர். அக்டோபர் கடைசி வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

நவம்பர் முதல் தேதியன்று சென்னையில் 685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது தினமும் குறைந்து நேற்று 577 பேருக்குத் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 104 பேர், திருவள்ளூர் 107, கோவையில் 196, காஞ்சிபுரம் 91, திருப்பூர் 98, சேலம் மாவட்டத்தில் 97 பேருக்கும், கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.சென்னையில் இது வரை 2 லட்சத்து 5419 பேருக்கும், செங்கல்பட்டில் 44,989 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 39,030 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 26,269 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.
மாநிலம் முழுவதும் இது வரை ஒரு கோடியே 7 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை நாளொன்றுக்கு 75 ஆயிரமாக அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

You'r reading தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு 2 ஆயிரமாக சரிவு.. சிகிச்சையில் 18 ஆயிரம் பேர்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை