சபரிமலை பக்தர்கள் வருகை குறைவு : வாழை விற்பனையில் சரிவு

by Balaji, Nov 26, 2020, 11:07 AM IST

கோவை திருப்பூர் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வாழை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது இதில் குறிப்பாக அதிக விலை கிடைக்கும் நேந்திரம் செவ்வாழை பூவன் உள்ளிட்ட ரகங்கள் இப்பகுதியில் சாகுபடி செய்யப்படுகின்றன. மூன்று மாவட்டங்களிலும் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்படும் வாழைகளில் பிரதான இடத்தை பிடித்திருப்பது நேந்திரன் வாழை ஆகும். இந்த ரக வாழை சிப்ஸ் செய்ய ஏற்றது என்பதால் அண்டை மாநிலமான கேரளாவிற்குப் பெருமளவில் அனுப்பி வைக்கப்படுகிறது.

சபரிமலை மண்டல பூஜை காலத்தை ஒட்டி விளைச்சலைத் தரும் இந்த ரக வாழைகள் மூலம் சிப்ஸ் தயாரிப்பு தொழில் அமோகமாக நடந்து வருகிறது. நாடு முடிவதிலிருந்தும் சபரிமலை நோக்கி வரும் பக்தர்கள் சிப்ஸ் வாங்கி செல்வது இந்த வாழை விவசாயிகளை வாழ வைத்துக்கொண்டிருக்கிறது. ஊரடங்கு உத்தரவின் காரணமாகச் சபரிமலை உள்ளிட்ட கேரளாவின் முக்கிய தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் அங்கு வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது .

குறிப்பாகக் கேரளா சபரி மலைக்குச் செல்லும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கேரளாவில் விரும்பி வாங்கி செல்வது சிப்ஸ். அதற்கான வாழை கேரளாவின் அண்டை மாவட்டமான கோவை திருப்பூர் ஈரோடு போன்ற பகுதிகளில் விளைவிக்கப்பட்டு அனுப்பி வைக்கப் படுகின்றன. சபரிமலை பக்தர்கள் வருகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் சிப்ஸ் விற்பனை மற்றும் நேந்திரம் பழம் உள்ளிட்ட வாழை பயன்பாடும் குறைந்துள்ளன. இதனால் வாழை விற்பனை மந்தமாக இருக்கின்றன. இது தவிரக் கேரளாவின் சில இடங்களில் தற்போது வாழை பயிரிடப்பட்டு உள்ளது என்பதாலும் விலை குறைந்து விட்டது. சென்ற வருட விற்பனையை ஒப்பிடும் பொழுது இந்த வருடம் 50 சதவிகிதம் குறைந்து விட்டதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அவர்கள் பெருத்த நஷ்டத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். ஒரு கிலோ நேந்திரம் விலை சராசரியாக 25 முதல் 35 ரூபாயாக விற்கப்பட்ட நிலையில் சில நாட்களாக 8 ரூபாயிலிருந்து 18 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. செவ்வாழை ஒரு கிலோ 40 முதல் 45 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இப்போது 20 முதல் 25 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. இதே போல் மற்ற வாழைப்பழ வகைகளும் விலை சரிவைக் கண்டுள்ளன. இதனால் விவசாயிகள் முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வாழை வெட்டு கூலி சந்தைக்கு வாழைத்தாரைக் கொண்டு செல்லும் வாடகை ஆகியவை கூட கொடுக்க முடியவில்லை என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். நீண்ட நாட்களுக்குச் சேமித்து வைத்து விற்பனை செய்ய முடியாத விளைபொருட்களில் வாழை இருப்பதால் குறித்த காலத்திற்குள் இதனை விற்க வேண்டிய சூழ்நிலையில் விவசாயிகள் இருக்கின்றனர். இதனால் கிடைத்தது போதும் என்று குறைந்த விலைக்கே வியாபாரிகளுக்குக் கொடுக்கின்றனர். இருப்பினும் அது முழுமையாக விற்கப்படுவதில்லை.

தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் இருக்கும் விவசாயிகளுக்கு இது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கின்றன. எனவே அரசு எங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். . வாழை பயிரிட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தங்களுக்கு அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பதே வாழை விவசாயிகள் எதிர்பார்ப்பு.

You'r reading சபரிமலை பக்தர்கள் வருகை குறைவு : வாழை விற்பனையில் சரிவு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை