காஷ்மீரில் அதிகாலையில் கடும் துப்பாக்கிச் சண்டை.. 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..

by எஸ். எம். கணபதி, Dec 9, 2020, 09:41 AM IST

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 2 தீவிரவாதிகள் இன்று(டிச.9) அதிகாலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து, பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன. மேலும், தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. ஆனாலும், பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் தொடர்ந்து ஊடுருவ முயற்சித்து வருகின்றனர். அவர்களை ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து ஊடுருவலைத் தடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் புல்வாமாவின் திகென் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் இன்று(டிச.9) அதிகாலையில் சுற்றி வளைத்தனர். அப்போது, தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்த தீவிரவாதிகள் பற்றிய விவரங்கள் தெரியவில்லை. மேலும், அங்கிருந்து நவீனத் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.ஏற்கனவே காஷ்மீரின் நக்ரோட்டா பகுதியில் பான் சுங்கச் சாவடி அருகே கடந்த நவ.19ம் தேதியன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

You'r reading காஷ்மீரில் அதிகாலையில் கடும் துப்பாக்கிச் சண்டை.. 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை