தங்கக் கடத்தல் வழக்கு கேரள முதல்வரின் செயலாளர் மத்திய அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஆஜர்

by Nishanth, Dec 17, 2020, 11:47 AM IST

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கில் 4 முறை நோட்டீஸ் கொடுக்கப்பட்ட பின்னர் கேரள முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலாளர் ரவீந்திரன் இன்று கொச்சியில் உள்ள மத்திய அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷுடன் நெருக்கமாக இருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளரான ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் கைது செய்யப்பட்டார்.

இவரிடம் மத்திய புலனாய்வுத் துறை, சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் பல முறை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் சிவசங்கருக்கு தங்கக் கடத்தல் மட்டுமில்லாமல் மேலும் பல்வேறு முறைகேடுகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் இந்த முறைகேடுகளில் முதல்வர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலாளரான ரவீந்திரன் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக சிவசங்கர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

இதையடுத்து ரவீந்திரனிடம் விசாரணை நடத்த மத்திய அமலாக்கத் துறை தீர்மானித்தது. இதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி ரவீந்திரனுக்கு மத்திய அமலாக்கத் துறை நோட்டீஸ் கொடுத்தது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தனக்கு கொரோனா இருப்பதாகக் கூறி மருத்துவமனையில் சேர்ந்தார். சில நாள் சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்பினார். இதன் பிறகு கடந்த மாதம் 2வது முறையாக மத்திய அமலாக்கத் துறை அவருக்கு நோட்டீஸ் கொடுத்தது.ஆனால் அப்போதும் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் உடல் நலமில்லை என்று கூறி மருத்துவமனையில் சேர்ந்தார். இதன் பின்னர் வீடு திரும்பிய ரவீந்திரனுக்கு அமலாக்கத் துறை 3வது முறையாக நோட்டீஸ் கொடுத்தது. அப்போதும் விசாரணைக்கு ஆஜராகாமல் அவர் மருத்துவமனையில் சேர்ந்தார். விசாரணையில் இருந்து தப்பிப்பதற்காகவே ரவீந்திரன் நாடகமாடுகிறார் எனப் பரவலாகக் கூறப்பட்டது.

இதையடுத்து அவர் கைது செய்யப்படலாம் எனவும் கருதப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இன்று (17ம் தேதி) விசாரணைக்கு ஆஜராகக் கூறி 4வது முறையாக ரவீந்திரனுக்கு மத்திய அமலாக்கத் துறை நோட்டீஸ் கொடுத்தது. இன்றும் விசாரணைக்கு ஆஜராகா விட்டால் அவர் கைது செய்யப்படுவார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை ரவீந்திரன் கொச்சியில் உள்ள மத்திய அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ரவீந்திரன் முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

You'r reading தங்கக் கடத்தல் வழக்கு கேரள முதல்வரின் செயலாளர் மத்திய அமலாக்கத் துறையின் விசாரணைக்கு ஆஜர் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை