கேரள உயர்நீதிமன்றம் அனுமதி... சபரிமலையில் நாளை முதல் 5 ஆயிரம் பக்தர்கள் செல்லலாம்

by Nishanth, Dec 19, 2020, 11:03 AM IST

கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை (20ம் தேதி) முதல் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். 26ம் தேதிக்குப் பின்னர் சபரிமலை செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் இவ்வருட மண்டலக் கால பூஜைகளுக்காகக் கடந்த நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட்டது. மறுநாள் 16ம் தேதி முதல் மண்டலக் கால பூஜைகள் தொடங்கின. 41 நாள் நீளும் மண்டலக் காலம் வரும் 26ம் தேதி நடைபெற உள்ள பிரசித்தி பெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைகிறது.

மண்டல பூஜைக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் சபரிமலை கோவிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனோ பரவல் காரணமாக இந்த மண்டலக் காலத்தின் தொடக்கத்தில் வார நாட்களில் 1,000 பக்தர்களும் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 2,000 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டு வந்தனர். மண்டலக் காலத்தில் வழக்கமாக லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை செல்வார்கள்.

இந்நிலையில் பக்தர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் வருடந்தோறும் சபரிமலை செல்லும் பெரும்பாலான பக்தர்கள் சபரிமலை செல்ல முடியாமல் மனவேதனை அடைந்தனர். இதனால் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து முதல் கட்டமாகக் கடந்த சில வாரங்களுக்கு முன் வார நாட்களில் 2,000 பக்தர்களும் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 3 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர்.இதற்கிடையே சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த ஒரு பக்தர் உள்பட ஏராளமானோர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த மாதம் இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், மண்டலக் காலம் தொடங்கி சில வாரங்களுக்குப் பின்னர் அப்போதைய நிலையைப் பொறுத்து பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து முடிவு செய்யலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் இந்த மனுக்களை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், தினமும் 5,000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டது. என்று முதல் பக்தர்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் டிசம்பர் 20ம் தேதி முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க தேவசம் போர்டு தீர்மானித்தது.

அதன்படி சபரிமலையில் நாளை முதல் 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதற்கிடையே வரும் 26ம் தேதிக்குப் பின்னர் சபரிமலை செல்லும் பக்தர்கள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆண்டிஜன் பரிசோதனை நடத்தினால் போதும். ஆனால் சபரிமலையில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் 26ம் தேதி முதல் பக்தர்கள் 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்திய பின்னர் தான் சபரிமலை செல்ல முடியும். ஆனால் இந்த பரிசோதனை முடிவு கிடைக்கத் தாமதமாகும் என்பதால் பக்தர்களுக்கு இது பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

You'r reading கேரள உயர்நீதிமன்றம் அனுமதி... சபரிமலையில் நாளை முதல் 5 ஆயிரம் பக்தர்கள் செல்லலாம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை