ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்த துணை சபாநாயகர்..

by எஸ். எம். கணபதி, Dec 29, 2020, 09:27 AM IST

கர்நாடக சட்டமேலவை துணைச் சபாநாயகர் தர்மேகவுடா(64), ரயில் தண்டவாளம் அருகே சடலமாகக் கிடந்தார். அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் மூலம் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.கர்நாடகாவில் சட்டமேலவையின் துணை சபாநாயகராக தர்மேகவுடா இருந்து வந்தார். அவர் நேற்று சகாராபட்டினாவில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்தார். அங்கிருந்து இரவு 10 மணியளவில் புறப்பட்டு வெளியே சென்றிருக்கிறார். இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அவரது வேலைக்காரர்களும், உறவினர்களும் தேடிச் சென்றனர். போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்களும் தேடத் தொடங்கினர்.

இந்நிலையில், இன்று(டிச.29) அதிகாலையில் குணசாகரா பகுதியில் ரயில் தண்டவாளம் அருகே தர்மேகவுடா சடலமாகக் கிடந்தார். அதன் அருகே அவர் எழுதி வைத்த ஒரு கடிதம் இருந்தது. போலீசார் அந்த கடிதத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கடிதத்தில் சமீபத்தில் சட்டமேலவையில் நடந்த சம்பவம் குறித்து தர்மேகவுடா சில வரிகளைக் குறிப்பிட்டிருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். எனவே, அந்த சம்பவம் தொடர்பாக தர்மேகவுடாவுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை முடிவுக்கு வந்திருப்பாரோ என்று விசாரணை நடைபெறுகிறது.

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம்(ஜேடிஎஸ்) தலைவர் குமாரசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை கடத்திச் சென்று, அந்த ஆட்சியைக் கவிழ்த்து விட்டு பாஜக ஆட்சி அமைத்தது. சமீபத்தில் பசுவதை தடுப்புச் சட்டம், சட்டமேலவையில் கொண்டு வரப்பட்டது. அதைக் காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது. ஆனால், அதன் கூட்டணிக் கட்சியான ஜேடிஎஸ், அந்த சட்டத்தைத் தேர்வுக்குழுவுக்கு அனுப்பக் கூறியது. அப்போது சபாநாயகர் இருக்கையில் தர்மேகவுடா இருந்தார். அவர் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அச்சமயம், காங்கிரஸ் உறுப்பினர்கள், தர்மேகவுடாவை இருக்கையில் இருந்து வலுக்கட்டாயமாக அகற்றி, வெளியேற்றினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தர்மேகவுடா தற்கொலை செய்திருக்கிறார்.தர்மேகவுடா மறைவுக்கு அக்கட்சி நிறுவனர் முன்னாள் பிரதமர் தேவகவுடா வெளியிட்ட இரங்கல் செய்தியில், தர்மேகவுடா மிகவும் நாகரீகமானவர். மென்மையான குணம் படைத்தவர். அவரது மறைவு அதிர்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

You'r reading ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்த துணை சபாநாயகர்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை