தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 8,867 பேர்.. பாதிப்பு குறைந்து வருகிறது..
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் 8,867 பேர் சிகிச்சையில் உள்ளனர்.தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா வைரஸ் நோய் வேகமாகப் பரவியது. அக்டோபர் மாதத்திற்குப் பிறகு, புதிதாக நோய் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. ஆனாலும், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகத் தினமும் புதிதாக ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று பரவி வருகிறது.
தமிழக அரசு நேற்று(டிச.28) வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் 1009 பேருக்குப் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இதையும் சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 15,175 ஆக உயர்ந்தது.மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 1074 பேரையும் சேர்த்து, இது வரை 7 லட்சத்து 94,228 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 11 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,080 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 8867 பேர் சிகிச்சையில் உள்ளார்கள்.
சென்னை(285 பேர்), கோவை(93பேர்), செங்கல்பட்டு(65பேர்) மாவட்டங்களில் மட்டும் நேற்று 50க்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று பாதித்திருக்கிறது. மற்ற மாவட்டங்களில் நேற்று 50க்கும் குறைவானவர்களுக்கே தொற்று பாதித்தது. சென்னையில் இது வரை 2 லட்சத்து 24,672 பேருக்கும், செங்கல்பட்டில் 49,853 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 42,539 பேருக்கும், கோவையில் 52,074 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.தமிழகம் முழுவதும் நேற்று 64 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டதில் ஆயிரம் பேருக்குத்தான் தொற்று பாதிப்பு உறுதியானது. அதனால் புதிதாக கொரோனா பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது.
You'r reading தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 8,867 பேர்.. பாதிப்பு குறைந்து வருகிறது.. Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News