கொரோனா தடுப்பூசி அனுப்ப தயார் நிலையில் உள்ள விமானங்கள்

by Nishanth, Jan 7, 2021, 17:02 PM IST

கொரோனா தடுப்பூசிகளை அனுப்புவதற்குப் பயணிகள் விமானங்கள் தயார்ப்படுத்தப்பட்டுவிட்டன. இன்று அல்லது நாளை அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும். சென்னை மற்றும் ஐதராபாத்திலிருந்து தான் தென்னிந்திய மாநிலங்களுக்குத் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளது.இந்தியாவில் பல மாத காத்திருப்புக்குப் பின்னர் கொரோனா தடுப்பூசி விநியோகத்திற்குத் தயாராகிவிட்டது. பாரத் பயோடெக் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள இந்த கொரோனா தடுப்பூசிக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டுத் துறை இறுதி அனுமதி அளித்துவிட்டது.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார மையங்களில் இதற்கான ஒத்திகை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. நாளை இறுதிக் கட்ட ஒத்திகை நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் தடுப்பூசிகளை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைப்பதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காகப் பயணிகள் விமானங்கள் தயார்ப்படுத்தப்பட்டுள்ளன. இன்று அல்லது நாளை அந்தந்த மாநிலங்களுக்குத் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும்.

பூனாவில் இருந்து தான் இந்தியா முழுவதும் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. முக்கிய மையமாகச் செயல்படும் இங்கிருந்து தான் நாடு முழுவதும் 41 மையங்களுக்குத் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும். வட இந்தியாவுக்கு டெல்லி மற்றும் கர்நாலில் இருந்து அனுப்பி வைக்கப்படும். கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்குக் கொல்கத்தாவில் இருந்தும், சென்னை மற்றும் ஹைதராபாத்தில் இருந்து தென்னிந்தியா முழுவதற்கும் தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்படும். இதற்கிடையே நாளை தடுப்பூசிக்கான இறுதி ஒத்திகை நடைபெற உள்ளதால் இன்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தடுப்பூசிக்கு எதிரான வதந்திகள் பரவுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

முதல் கட்டத்தில் 4 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஒத்திகையின் போது கிடைத்த தகவல்கள் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தடுப்பூசி போடும் ஊழியர்களுக்கு உரியப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றும், தடுப்பூசி போட்ட பின்னர் அரைமணி நேரம் அவர்களைக் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூட்டத்தில் கூறினார். மேலும் கேரளா, மகாராஷ்டிரா மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சமீபகாலமாக கொரோனா பரவல் அதிகமாகி வருவதால் இந்த மாநிலங்களில் தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கை முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் கேட்டுக்கொண்டார்.

You'r reading கொரோனா தடுப்பூசி அனுப்ப தயார் நிலையில் உள்ள விமானங்கள் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை