பெற்றோரை அறையில் பூட்டி வைத்து பட்டினி போட்ட மகன்

by Nishanth, Jan 21, 2021, 11:25 AM IST

தாலாட்டி, சீராட்டி வளர்த்த பெற்றோரை அறையில் பூட்டி போட்டு பல நாட்களாக உணவு கொடுக்காமல் அவர்களை பட்டினி போட்டு கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல நாட்கள் உணவு கிடைக்காததால் தந்தை பரிதாபமாக உயிர் இழந்தார். தாய் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் நம் அண்டை மாநிலமான கேரளாவிலுள்ள கோட்டயத்தில் நடந்துள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள முண்டக்கயம் வண்டன்பதால் பகுதியைச் சேர்ந்தவர் பொடியன் (80). இவரது மனைவி அம்மிணி (76). இவர்களது மகன் ரெஜி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். ரெஜியின் வீட்டில் தான் பொடியனும், அம்மிணியும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் ரெஜி ஒழுங்காக உணவு கொடுப்பதில்லை. அவர்களை ஒரு அறையில் பூட்டி வைத்திருந்தார். இந்த விவரம் பக்கத்து வீட்டினருக்கும் தெரியும். ஆனால் ரெஜி அடிக்கடி குடித்துவிட்டு பக்கத்து வீட்டினரிடம் தகராறு செய்து வந்ததால் இது குறித்து யாரும் வெளியில் கூறுவதில்லை.

மேலும் வேலைக்குச் செல்லும்போது வேறு யாரும் தனது பெற்றோருக்கு உணவு கொடுக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அறையின் வெளியே ஒரு நாயையும் கட்டிப்போட்டு விட்டுச் செல்வார். இந்நிலையில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த சுகாதாரத் துறை ஊழியர்கள் களப்பணிக்காக ரெஜியின் வீட்டுக்குச் சென்றனர். அப்போது தான் வயதான ரெஜியின் பெற்றோர் இருவரும் அறையில் பூட்டப்பட்டுக் கிடப்பது தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சுகாதார ஊழியர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்று பார்த்த போது இருவரும் எலும்பும் தோலுமாக ஆபத்தான நிலையில் கிடந்தனர். இதையடுத்து போலீசார் உடனடியாக இருவரையும் மீட்டு கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பொடியன் பரிதாபமாக இறந்தார். தொடர்ந்து அவரது உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஒழுங்காக உணவு கிடைக்காதது தான் மரணத்திற்குக் காரணம் எனத் தெரியவந்தது. இதற்கிடையே அம்மிணியின் உடல்நிலையும் மோசமடைந்தது. அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோருக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டு மகன் கொடுமைப்படுத்தியதில் தந்தை இறந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You'r reading பெற்றோரை அறையில் பூட்டி வைத்து பட்டினி போட்ட மகன் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை