முடங்கிய இணையதளம்.. பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க முடியாமல் தவிப்பு!

பான் கார்டு வைத்திருப்போர் அதை வரும் 31-ம் தேதிக்குள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வருமான வரி நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்டு வைத்திருப்போர் அதை, தங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. இதற்கான இறுதிக்கெடு, கடந்த ஆண்டு ஜூன் 30 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, இதற்கான காலவரம்பு நடப்பாண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த காலவரம்பை மேலும் நீட்டிக்க முடியாது என மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, இன்றுடன் அனைவரும் தங்கள் பான் கார்டுகளை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால், சம்பந்தப்பட்டவர்களின் பான் கார்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயலிழப்பு செய்யப்படும். அத்துடன், பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்களிடம் வருமான வரி சட்டத்தின் கீழ் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. வங்கிகளில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனை மேற்கொள்ள பான் கார்டு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இன்று பயனர்கள் தங்கள் ஆதார் எண்ணை இணைக்க வருமான வரித்துறையின் வலைத்தள பக்கத்திற்கு படையெடுத்தனர். ஒரே நேரத்தில் பலர் வலைதளத்தை அணுகியதால் அந்த பக்கம் முடங்கியது. அதையடுத்து பயனர்கள் கால நீட்டிப்பு வேண்டும் என சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டனர். தொடர்ந்து முடங்கிபோன வலைத்தளம் இயல்பு நிலைக்கு திரும்பி இயங்கி வருகிறது.

READ MORE ABOUT :