உலக நாடுகளை உலுக்கி எடுத்த கொரோனா வைரஸ் தற்போது, தனது இரண்டாவது முகத்தை காட்டி வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. திங்கள் கிழமை கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத அளவில் 1 லட்சத்து 3 ஆயிரத்தை எட்டியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தற்போது 45-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், 18-வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை போட அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறைக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தியுள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இரவு நேர ஊரடங்கை தொடர்ந்து, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ஊரடங்கும், சனி, ஞாயிற்றுக்கிழமை முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இதனிடையே இம்மாதம் 15- ஆம் தேதிக்குள் இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக 50 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படும் என உலக சுகாதார நிறுவனம் கூறியதாக வீடியோ ஒன்று பரவுவதாக கூறப்படுகிறது. இதனால், இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், 15 ஆம் தேதிக்குள் 50 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படும் எனக்கூறுவதாக வெளியாகியுள்ள வீடியோ போலியானது என உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.