நாடு தழுவிய விவசாயிகள் பேரணி ! - ராகுல் காந்தி அழைப்பு!
Rahul Gandhi call for Nationwide farmers rally
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசை வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் பேரணி நடத்த காங். தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜஸ்தான், ம.பி., சட்டீஸ்கர் மாநிலங்களில் காங். ஆட்சியை கைப்பற்றியது .
தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிப்படி அம்மாநிலங்களில் 2 உடனடியாக விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பா.ஜ.க. ஆளும் அஸ்ஸாம், குஜராத் மாநில அரசுகளும் விவசாயக் கடன் தள்ளுபடியை அவசரமாக அறிவித்துள்ளன. காங்கிரசை காப்பியடித்து பா.ஜ.க மாநில அரசுகள் கடன் தள்ளுபடி செய்யும் நிலைக்கு சென்றுள்ளது காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
இதனால் விவசாயிகள் பிரச்னையை தேசிய அளவில் மோடி அரசுக்கு எதிராக கொண்டு செல்ல ராகுல் முடிவு செய்து நாடு தழுவிய விவசாயிகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். 2014 பொதுத் தேர்தலின் போது விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே மோடி நிறைவேற்றவில்லை. விவசாயிகள் முன்னேற்றத்திற்கான எந்தத் திட்டமும் செயல் படுத்தவில்லை. விவசாயிகளின் தற்போதைய தலையாய பிரச்னை கடன் நெருக்கடி .
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி ஜனவரி மாதம் அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகளைத் திரட்டி காங்.சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். தொடர்ந்து பிப்ரவரி மாதம் டெல்லியில் விவசாயிகளின் மெகா பேரணி தமது தலைமையில் நடத்தப்படும் என்று ராகுல் அறிவித்துள்ளார்.
You'r reading நாடு தழுவிய விவசாயிகள் பேரணி ! - ராகுல் காந்தி அழைப்பு! Originally posted on The Subeditor Tamil
More India News