கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள்

by SAM ASIR, May 1, 2021, 21:37 PM IST

'வரும் முன் காப்போம்' என்ற எச்சரிக்கை உணர்வு அநேகமாக எல்லோருக்குள்ளும் எழுந்திருக்கும் காலம் இது. கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை வெகுதீவிரமாக உள்ளது. முக கவசம், முக மறைப்பு, தனி நபர் இடைவெளி, கைகளை அடிக்கடி சோப்பு பயன்படுத்தி கழுவுதல், கிருமி நாசினி பயன்படுத்துதல், கூட்டமான இடங்களுக்குச் செல்வதை தவிர்த்தல் என்று பல முன்னெச்சரிக்கைகளை நாம் கடைபிடித்தாலும், உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதும் அவசியமாகும். வீட்டிலேயே எளிதாக நம் நோய் எதிர்ப்பு ஆற்றலை கூட்டக்கூடிய சில பழங்கள், காய்கறிகள் உள்ளன. வைட்டமின் சி சத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை அளிக்கக்கூடியது. ஆகவே, வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம்.

வைட்டமின் சி

வைட்டமின் சி எனப்படும் அஸ்கார்பிக் அமிலம் நம் உடலில் மிக முக்கியமான செயல்களை ஆற்றுகிறது. இது நீரில் கரையக்கூடியது. இயற்கையாக நம் உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு ஆற்றலை இது அதிகரிக்கும். அழற்சி ஏற்படுவதை தடுப்பதுடன், உடல் முழுவதும் சேதமுற்றிருக்கும் திசுக்களையும் இது சரி செய்யும். வைட்டமின் சி சத்தை போதுமான அளவுக்கு நாம் சாப்பிடும்போது, அது காயங்களை ஆற்றும், உடலின் எலும்புகளை ஆரோக்கியமாக பாதுகாக்கும்.

ஆரஞ்சு

100 கிராம் எடையுள்ள ஒரு ஆரஞ்சுப் பழத்தில் 53.2 மில்லி கிராம் வைட்டமின் சி அடங்கியுள்ளது. இது ஆக்ஸிஜனேற்ற தடுப்புப் பண்பு (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்) கொண்டது. நம் உடலில் நிலையற்ற அணுக்களின் (ஃப்ரீ ராடிகல்ஸ்)செயல்பாட்டால் உடல் செல்கள் சேதமடைவதை இது தடுக்கிறது. சளி மற்றும் பல்வேறு ஒவ்வாமை (அலர்ஜி)தொல்லைகளால் அவதிப்படுவோருக்கு ஆரஞ்சு நல்லது. மன அழுத்தத்திற்குரிய ஹார்மோன்களை மட்டுப்படுத்தக்கூடிய கொலேஜன் சுரப்பை இது ஊக்குவிக்கிறது.

நெல்லிக்காய்

ஆயுர்வேத மருத்துவர்கள் நெல்லிக்காயை அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஒரு நெல்லிக்காயில் (முழு நெல்லி)ஆரஞ்சு பழத்தைப் போன்று 20 மடங்கு வைட்டமின் சி சத்து இருக்கிறதாக கூறப்படுகிறது. இதிலுள்ள வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்ற தடுப்பானாக (ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்) செயல்பட்டு நரம்பு மண்டலம், நோயெதிர்ப்பு மண்டலம் மற்றும் தோலுக்கு நன்மை செய்கிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை (மெட்டாபாலிசம்) இது ஊக்குவிக்கிறது. எலும்பு உருவாக்கம், மறு உருவாக்கம் ஆகியவற்றுக்கும் இது உதவுகிறது. தினமும் நெல்லிக்காய் சாறு பருகலாம் அல்லது ஒரு காயை சாப்பிடலாம்.

குடை மிளகாய்

சிட்ரிக் அமிலம் கொண்ட எந்தப் பழத்திற்கும் இணையான அளவுக்கு வைட்டமின் சி சத்து குடை மிளகாயிலும் உள்ளது. இதில் பீட்டா கரோடின் அதிகம் உள்ளது. இதிலுள்ள தாதுகளும் வைட்டமின்களும் இயற்கையான நோயெதிர்ப்பு திறனை அதிகப்படுத்துவதுடன், தோல் மற்றும் கண்களுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது.

எலுமிச்சை

மிக எளிதாக கிடைக்கக்கூடிய எலுமிச்சைப் பழமும் அதிக வைட்டமின் சி சத்தினை அளிக்கக்கூடியதாகும். நிலையற்ற அணுக்களை (ஃப்ரீ ராடிகல்ஸ்) அழித்து உடலின் நோயெதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. இதில் தையமின், ரிபோஃபிளேவின், வைட்டமின் பி6, பான்தோதெனிக் அமிலம், செம்பு (காப்பர்) மற்றும் மாங்கனீசு ஆகியவை உள்ளன.

அன்னாசிப் பழம்

நூற்றாண்டு காலமாக செரிமானம் மற்றும் அழற்சி பிரச்னைகளுக்கான சிகிச்சையில் அன்னாசிப் பழம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு உள்ளது. இது கலோரி குறைவானது. இதில் நார்ச்சத்தும், புரோமிலைனும் உள்ளது. தினமும் அன்னாசிப் பழம் சாப்பிடுவதால் வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயம் தவிர்க்கப்படுகிறது.

You'r reading கொரோனா பரவல்: இயற்கையாக நோய் எதிர்ப்பு ஆற்றலை தரும் உணவுகள் Originally posted on The Subeditor Tamil

More Health News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை