அடுத்த 24 மணி நேரம் ரொம்ப முக்கியம்.. விழிப்புடன் இருங்கள்...! காங். தொண்டர்களுக்கு ராகுல் டிவீட்!

Dont panic, Next 24 hours very important, Rahul Gandhi alerts Cong workers on twitter:

by Nagaraj, May 22, 2019, 15:46 PM IST

ஓட்டு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் தொண்டர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.. அடுத்த 24 மணி நேரம் ரொம்ப முக்கியம்.. விழிப்புடன் இருங்கள்.. என ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் 542 மக்களவைத் தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்து நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பெரும்பாலனவை மீண்டும் பாஜக ஆட்சியே அமையும் எனத் தெரிவித்துள்ளது எதிர்க் கட்சியினரை பெரும் கலக்கத்தில் ஆழ்த்திவிட்டது. இதை நம்புவதா? இல்லையா? என்று பாஜக தரப்புக்கே சந்தேகம் வரும் அளவுக்கு ஒட்டுமொத்த கருத்துக் கணிப்புகளும் மோடிக்கு ஆதரவாக வெளிவந்து நாடு முழுவதுமே பரபரப்பாகிக் கிடக்கிறது.

எதிர்க்கட்சிகள் தரப்பிலோ, இது மோசடியான கருத்துக் கணிப்பு. ஓட்டுப்பதிவு எந்திரங்களில் ஏதோ தில்லுமுல்லு நடத்தப் பார்க்கிறார்கள் என்று புகார் வாசித்து, அனைவரின் கவனத்தையும் இப்போது வாக்குப்பதிவு மையங்கள் பக்கம் திருப்பச் செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு வாக்குப் பதிவு மையங்கள் முன் எதிர்க் கட்சியினர் விடிய, விடிய கண்காப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கு ஒரு ட்வீட் செய்திருக்கிறார்.அதில், அடுத்த 24 மணி நேரம் மிகவும் முக்கியமானது. விழிப்புடன் இருங்கள். கண்காணியுங்கள் ஆனால் அச்சப்படாதீர்கள். நீங்கள் உண்மைக்காக போராடுகிறீர்கள். கருத்துக் கணிப்பு முடிவுகளால் மனம் உடைந்து விடாதீர்கள். காங்கிரஸ் மீதும், உங்கள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் கடின உழைப்புக்கு பலனில்லாமல் போகாது. ஜெய் ஹிந்த்., என்று ராகுல் காந்தி ட்வீட் செய்திருக்கிறார்.

இதே போன்று தான் பிரியங்கா காந்தியும், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஊடகங்கள் வெளியிட்ட ஞாயிறன்று இரவே ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டிருந்தார். அதில், கருத்துக்கணிப்புகள் காரணமாக காங்கிரஸ் தொண்டர்கள் யாரும் மனம் தளர்ந்து விடாதீர்கள். இவை போலியானவை. உங்கள் நம்பிக்கையை தகர்ப்பதற்காகவே இவை பரவச் செய்யப்படுகின்றன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் நீங்கள் தொடர்ந்து விழிப்புடனும் கண்காணிப்புடனும் இருப்பது மிகவும் அவசியம். நமது கடின உழைப்பு வீண் போகாது. நிச்சயம் பலன் அளிக்கும். நம்பிக்கையுடன் இருங்கள் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading அடுத்த 24 மணி நேரம் ரொம்ப முக்கியம்.. விழிப்புடன் இருங்கள்...! காங். தொண்டர்களுக்கு ராகுல் டிவீட்! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை