அதிமுக -பாஜக கூட்டணி இருக்கிறதா, இல்லையா? இடைத்தேர்தல் தடுமாற்றங்கள்..

Is bjp-admk alliance continues in bypolls?

by எஸ். எம். கணபதி, Oct 1, 2019, 12:31 PM IST

அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா, இல்லையா என்ற குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இரு கட்சித் தலைவர்களும் மாறி, மாறிப் பேசி வருவதால் குழப்பம் நீடிக்கிறது.

விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த 2 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது. திமுக அணியில் விக்கிரவாண்டியில் திமுகவும், நாங்குனேரியில் காங்கிரசும் போட்டியிடுகின்றன.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, பாமக, தமாகா, சமக உள்ளிட்ட கட்சிகள் இந்த இடைத்தேர்தல்களில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து விட்டன. ஆனால், பாஜக ஆதரவு தருவதில், அக்கட்சித் தலைவர்கள் மாறி மாறிப் பேசி வருகிறார்கள். காரணம், தேமுதிக தலைவர் விஜயகாந்தை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்கள். அதேசமயம், பாஜகவையும், புதிய தமிழகத்தையும் அதிமுகவினர் கண்டுகொள்ளவில்லை.

இந்த சூழ்நிலையில்தான், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், காஞ்சிபுரத்தில் பேட்டியளித்த போது, இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் என்றார். அதற்கு பிறகு ஒரு நாள், திருச்செந்தூரில் பேட்டியளித்த போது அவரே, அதிமுகவுடன் கூட்டணி நீடிக்கிறது. இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறும் என்றார்.

அதன்பின்பு, தி இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், எங்கள் கட்சித் தலைவர்கள் யாரையும் சந்தித்து, அதிமுக ஆதரவு கேட்கவே இல்லை. நாங்கள் எங்கள் கட்சித் தலைமை என்ன சொல்கிறதோ, அதற்கு கட்டுப்படுவோம் என்றார்.

இதற்கிடையே, ஓமலூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவுக்கு இங்கே மாநில தலைவர் யாரும் இல்லை. அதனால், அவர்களிடம் நேரில் போய் ஆதரவு கேட்க வாய்ப்பில்லை. ஆனால், அதிமுக கூட்டணியில்தான் பாஜக இருக்கிறது என்றார்.

அதேசமயம், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம், பாஜகவை பிரச்சாரத்திற்கு அழைக்கவில்லையா? என்று நிருபர்கள் கேட்டதற்கு பதிலளிக்காமல் மழுப்பி விட்டு சென்றார். மேலும், நாங்குனேரியில் நடந்த அதிமுக தேர்தல் பணிக்குழு கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது, வேலூர் தொகுதியில் அதிமுக தோற்றதற்கு காரணமே, பாஜகவினர் முத்தலாக் சட்டத்தை கொண்டு வந்ததுதான். அவர்களால்தான் சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

ஆக, மொத்தத்தில் பாஜகவினர் வந்து பிரச்சாரம் செய்தால், நாங்குனேரி தொகுதியில் கிறிஸ்தவ நாடார் இனத்தவரின் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காமல் போய் விடும் என்று அக்கட்சி பயப்படுவது நன்றாக தெரிகிறது. ஆனாலும், அதிமுகவினர் பாஜகவை கூட்டணியில் இருந்து பிரிக்க முடியாமல் பயத்துடன் சமாளிக்கிறார்கள்.

கடைசியாக, திருமழிசையில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பேட்டியளித்த போது, அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறது என்று தெரிவித்தார். பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனோ இன்று(அக்.1) சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில், அதிமுகவுக்கு இடைத்தேர்தலில் ஆதரவு தருவது பற்றி, எங்கள் கட்சித் தலைமை முடிவு செய்யும் என்றார்.

எப்படியோ, வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் முடியும் வரை அதிமுக கூட்டணியில்் பாஜக வரும்... ஆனா, வராது...

You'r reading அதிமுக -பாஜக கூட்டணி இருக்கிறதா, இல்லையா? இடைத்தேர்தல் தடுமாற்றங்கள்.. Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை