முக்கொம்பு அணை மதகு உடைப்பிற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Aug 23, 2018, 17:27 PM IST

முக்கொம்பு அணை மதகு, கொள்ளிடம் பாலம் உடைந்ததற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: திருச்சி முக்கொம்பு அணையின் 8 மதகுகள் உடைந்து அணைக்கு பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு திருச்சி- கரூர் சாலையில் உள்ள முக்கொம்பு மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் முசிறி-நாமக்கல் செல்லும் சாலையை பயன்படுத்த முடியாத மோசமான நிலை உருவாகியிருக்கிறது.

கொள்ளிடம் பாலம், தற்போது முக்கொம்பு மேலணை என்று ஒவ்வொன்றாக உடைந்து வருவது அணைகள் பாதுகாப்பு விஷயத்தில் அ.தி.மு.க அரசின் அக்கறையின்மையையும், அலட்சியத்தையும் காட்டுகிறது.

அணைகள் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கிச் செலவிடுகிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அ.தி.மு.க அரசு, இந்த அணைகளின் பாதுகாப்பு குறித்து முன்கூட்டியே ஆய்வு செய்து கணித்திடத் தவறியது ஏன்? அணை சீரமைப்புப் பணிகளின் கீழ் முக்கொம்பு அணை மற்றும் கொள்ளிடம் பாலத்தின் தூண்களை முன் கூட்டியே சீரமைக்கத் தவறிய அ.தி.மு.க அரசே இந்த பாதிப்புகளுக்கு முழுப்பொறுப்பேற்க வேண் டும்.

ஆகவே, காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள அணைகள் மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கையாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள பொதுப் பணித்துறை தலைமைப் பொறியாளர்கள் மற்றும் வல்லுனர்கள் அடங்கிய குழு ஒன்றினை அமைத்திட வேண்டும் எனவும், அக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று, தமிழகத்தில் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட சீரமைப்புப் பணிகளை இனியும் தாமதப்படுத்தாமல், மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You'r reading முக்கொம்பு அணை மதகு உடைப்பிற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை