வைரமுத்துவிற்கு ஆதரவாக களத்தில் குதித்த 18 தமிழ்ப் படைப்பாளிகள்!

கவிஞர் வைரமுத்துவுக்கு எதிரான போராட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும் என தமிழ்ப் படைப்பாளிகள் 18 பேர் வலியுறுத்தியுள்ளனர்.

Jan 19, 2018, 15:36 PM IST

கவிஞர் வைரமுத்துவுக்கு எதிரான போராட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும் என தமிழ்ப் படைப்பாளிகள் 18 பேர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்ப் படைப்பாளிகள் சா.கந்தசாமி, பிரபஞ்சன், மாலன், முத்துலிங்கம், தமிழச்சி தங்கபாண்டியன், மனுஷ்யபுத்திரன், மார்க்ஸ், எஸ்.ராமகிருஷ்ணன், சல்மா, ச.தமிழ்செல்வன், அறிவுமதி, பவா செல்லத்துரை, சு.வெங்கடேசன், டிராஸ்கி மருது, இளையபாரதி, இமையம், ஹாஜா கனி, இந்திரன், காவ்யா சண்முக சுந்தரம், ஏகலைவன், அ.வெண்ணிலா, அருணன், இளம்பிறை, ஜெய பாஸ்கரன், தேவநேயன், வேலுசாமி இந்திரன், சு.ராமசந்திரன், இரா.தெ.முத்து, ச.செந்தில்நாதன், கிராபியன் பிளாக், தமிழன் பிரசன்னா, அ.முத்துகிருஷ்ணன், ஒளிவண்ணன், நா.அசோகன், ஆர்.கே. அருள் செல்வன் ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், “தமிழ்த் திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியதுடன் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் மூலம் தமிழ் இலக்கிய உலகுக்கு அளப்பரிய பங்களிப்பை செய்திருப்பவர் கவிஞர் வைரமுத்து. தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தும் முக்கியமான ஆளுமைகள் குறித்து அவர் தொடர்ந்து எழுதி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக ‘தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில், சொல்லப்படாத ஒரு சொல்லை சொல்லியதாகச் சொல்லி மக்களை திசைதிருப்பும் செயல்களில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.

இலக்கியப் பரிச்சயம் இல்லாதவர்கள் ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையைப் படிக்காமலேயே பிரச்சனையை ஏற்படுத்துகின்றனர். அந்த ஆய்வுக் கட்டுரையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆண்டாளின் பெருமைகளை மேற்கோள் காட்டியிருக்கிறார். அதில் ஓர் ஆராய்ச்சியாளரின் மேற்கோளையும் சுட்டிக் காட்டுகிறார். இதில் எந்தத் தவறும் இல்லை.

கடவுள் மறுப்பாளர்களும் கற்க வேண்டிய தமிழ், ஆண்டாளின் தமிழ் என்பதை இந்தக் கட்டுரையில் வைரமுத்து புலப்படுத்தியிருக்கிறார். எந்தவொரு கருத்தையும், கருத்தியல் ரீதியாகச் சந்திக்காமல் பிரச்சனையில் ஈடுபடுவதை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

தனது கட்டுரையில் எடுத்துக்காட்டிய மேற்கோள், பிறரைப் புண்படுத்தியிருக்கும் பட்சத்தில் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக வைரமுத்து கூறியிருக்கிறார். அதன்பிறகும் தனிப்பட்ட முறையில் அவரை விமர்சிப்பதையும், போராட்டங்களில் ஈடுபடுவதையும், மன்னிப்பு கேட்க கெடு விதிப்பதையும் எழுத்துலகில் இயங்கும் படைப்பாளிகள் இணைந்து கண்டிக்கிறோம்.

ஆண்டாள் தமிழச்சி. 3 ஆயிரம் ஆண்டுகளாக பேசவும், எழுதவும்படும் தமிழ் மொழியில், 1,200 ஆண்டுகளுக்கு முன்பே திருப்பாவை பாடியவர். தமிழினம் முழுவதுக்கும் சொந்தமான அவர், தமிழில் பாடிய சர்வதேசக் கவிஞர். அவர் எங்களுக்கே சொந்தம் எனக் கூறி யாரும் பிரச்சனையில் இறங்குவது சரியல்ல.

நாகரிகமான, சுதந்திரமான நாட்டில் கவிஞர்கள், எழுத்தாளர்களை பயமுறுத்தி பணிய வைக்க சிலர் முயல்வதை ஜனநாயகத்தின் பெயராலும், சுதந்திரத்தின் பெயராலும் அனுமதிக்க முடியாது. கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் பாதுகாப்புக்கு அரசு முன்னின்று செயல்பட வேண்டும். படைப்புலகில் நீண்டகாலமாக இயங்கி வரும் வைரமுத்து எழுதியதை சரிவர புரிந்து கொள்ளாமலேயே இத்தகைய உணர்ச்சிவயப்பட்ட எதிர்ப்புகளை தூண்டிவிடும் விதத்தில் சிலர் பேசுவதும், எழுவதும் எந்த விதத்திலும் ஆரோக்கியமானதல்ல.

எனவே, வைரமுத்துவுக்கு எதிரான போராட்டங்கள் நிறுத்தப்படுவதுடன், அவர் பாதுகாப்பும் மிக முக்கியமானது என்பதை அரசின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறோம். தமிழால் ஒருங்கிணைந்திருக்கும் நமக்கிடையே எந்தத் தீய சக்திகளும் சிறு விரிசலை ஏற்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்பதை உணர்த்த வேண்டிய தருணம் இது. தமிழ்ச் சமூகம் இதை கண்டிப்பாக உணரும் என்று நம்புகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading வைரமுத்துவிற்கு ஆதரவாக களத்தில் குதித்த 18 தமிழ்ப் படைப்பாளிகள்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை