யாருக்கு எத்தனை சீட்? திமுகவில் கலகத்தை தொடங்கிய துரைமுருகன்!

Loksabha Elections 2019 DMK starts Seat Sharing Talks with alliance parties

Jan 28, 2019, 17:46 PM IST

லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் அடங்கிய குழுவை நியமித்திருக்கிறார் ஸ்டாலின். இந்தமுறை இரட்டை இலக்கத்தில் சீட்டுகளைப் பெற்றுவிட வேண்டும் என காங்கிரஸுக்கு டெல்லியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

'எங்களுக்கு வேண்டிய தொகுதிகள் கிடைக்கும்' எனத் திருநாவுக்கரசர் நம்பிக்கையோடு இருக்கிறார். ஆனால் துரைமுருகன் உள்ளிட்டோர், 5 சீட் கொடுக்கலாம், அதுவும் ஜி.கே.வாசனை அழைத்து வந்தால் 6 சீட் கொடுக்கலாம் என்ற எண்ண ஓட்டத்தில் இருக்கிறார்களாம். காங்கிரஸ் தலைவர்களோ, பத்து சீட்டுகளையாவது வாங்கிவிட வேண்டும் என உறுதியாக இருக்கிறார்கள்.

மதிமுகவுக்கு மேற்கு மண்டலத்தில் ஒரு சீட்டும் மத்திய மண்டலத்தில் ஒரு சீட்டும் வழங்கும் எண்ணத்தில் இருக்கிறார் ஸ்டாலின். காரணம், பொள்ளாச்சியில் மதிமுகவைச் சேர்ந்த டாக்டர்.கிருஷ்ணன் இரண்டு முறை வெற்றி பெற்றிருக்கிறார். அங்கு ஓரளவுக்கு பம்பரத்துக்கு வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறார்.

இதைப் பற்றி பொறுப்பாளர்களிடம் பேசியபோது, 'கடந்த சில தேர்தல்களில் மதிமுகவுக்கு பெரிதாக எந்த வெற்றியும் கிடைக்கவில்லை. வாக்கு சதவீதமும் அவர்களுக்கு அதல பாதாளத்தில் இருக்கிறது. ஒரு சீட் கொடுத்தால் கோபித்துக் கொள்வார். இரண்டு சீட் கொடுக்கலாம்' எனக் கூறியிருக்கிறார் மூத்த பொறுப்பாளர் ஒருவர்.

அதேபோல் இரண்டு கம்யூனிஸ்ட்டுகளுக்கும் தலா ஒரு சீட் என்ற முடிவில் இருக்கிறார் ஸ்டாலின். இதிலும் கடைசி நேரத்தில் சண்டை வரலாம் என்கிறார்கள். எப்படிப் பார்த்தாலும் 25 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். இந்த உறுதியால் கடைசிநேரத்தில் கூட்டணியில் குழப்பம் ஏற்படலாம் என்கின்றனர் திமுக தோழமைக் கட்சிகள்.

-அருள் திலீபன்

You'r reading யாருக்கு எத்தனை சீட்? திமுகவில் கலகத்தை தொடங்கிய துரைமுருகன்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை