ஜெயில் குழாய்கள் பதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கைது-மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

Feb 9, 2018, 20:00 PM IST

விவசாய நிலத்தில் கெயில் குழாய்கள் பதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா  வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொச்சியிலிருந்து பெங்களுரு வரை திரவக நிலையில் எரிவாயுவை வர்த்தக நிறுவனங்களுக்குக் கொண்டுசெல்ல தமிழகத்தின் மேற்குப் பகுதி மாவட்டங்களான கோயம்புத்ததூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி என 7 மாவட்டங்களில் உள்ள 310 கிலோ மீட்டர் விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை அமைப்பதற்காக முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி உட்பட அரசியல் கட்சிகள், விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பலதரப்பட்ட மக்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக அரசு, தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டிருந்த இந்தக் குழாய் பதிக்கும் பணி இன்று மீண்டும் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகில் உள்ள கோயில் நத்தம் என்ற கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் குழாய் பதிக்கும் பணியால் விவசாயிகளின் விளைநிலங்கள் மிகவும் பாதிக்கப்படும். பண்ணைகள், கிணறுகள், நீர்த்தொட்டிகள் என அனைத்தும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் நிர்க்கதியாக நீர்க்கும் சூழ்நிலை ஏற்படும் என எதிர்ப்பு தெரிவித்து குழாய் பதிக்கும் பணியை நிறுத்தக் கோரிய அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 9 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையின் இந்தக் கைது நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

வளர்ச்சி என்ற பெயரால் புதிய புதிய திட்டங்களைக் கொண்டுவந்து அதற்காக காலங்காலமாக பயன்தரக்கூடிய விவசாயத்தை அழிப்பது ஏற்றுக்கொள்ள இயலாதது. சில ஆண்டுகள் பயன்தரக்கூடிய கெயில், மீத்தேன், ஹைட்ரோ கார்ப்ன், நீயூட்ரினோ போன்ற திட்டங்களுக்கு பல தலைமுறைக்கு பலன்அளிக்கும் விவசாயத்தை அழிப்பது என்பது கண்களை விற்று சித்திரம் வரைவதற்குச் சமம்.

நாட்டின் வளர்ச்சி என்ற பெயரில் பெருமுதலாளிகளுக்காக பாடுபட்டு வரும் மத்திய பாஜக அரசு பெருமுதலாளிகளின் வளர்ச்சிக்காக தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது வேதனை அளிக்கிறது. ஏற்கெனவே வறட்சி, மழை, வெள்ளம், கடன் சுமை போன்ற பிரச்சினைகளால் விவசாயிகளும், விவசாயமும் அழிந்து வரும் சூழலில் விவசாய நிலத்தில் கெயில் குழாய் பதிப்பு என்பது மேன்மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாழாக்கிவிடும்

எனவே, கெயில் குழாய் பதிப்பு பணிகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய அரசையும், கெயிலுக்கு எதிராகப் போராடிய அனைவரின் மீது பதியப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மாநில அரசையும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

You'r reading ஜெயில் குழாய்கள் பதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் கைது-மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை