குரூப் 2 தேர்விலும் முறைகேடு.. தலைமைச் செயலக அதிகாரி உள்பட 2 பேர் சிறையிலடைப்பு

by எஸ். எம். கணபதி, Feb 3, 2020, 10:57 AM IST

குரூப்2 தேர்வு முறைகேடு தொடர்பாக தலைமைச் செயலக அதிகாரி உள்பட 2 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் சில இடைத்தரகர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகளுடன் ரகசிய கூட்டு வைத்து செயல்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களில் 99 பேர் மட்டும் இடைத்தரகர்கள் கூறியபடி, ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களை தேர்ந்தெடுத்து தேர்வு எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு இடைத்தரகர்கள் ஒரு பேனாவை அளித்திருக்கிறார்கள். அதைக் கொண்டு எழுதினால், விடைகளை எழுதிய சில மணி நேரத்தில் அவை மறைந்து விடும்.

இப்படி அழிந்து விட்ட விடைத்தாள்களில், தேர்வு அலுவலர்களின் துணையுடன் இடைத்தரகர்கள் சரியான விடைகளை எழுதியிருக்கிறார்கள். அந்த 99 பேரில் 39 பேர் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடத்திற்குள் வந்துள்ளனர்.
இந்த முறைகேடுகள் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஏற்கனவே இந்த வழக்கில் 14 பேர் கைதான நிலையில், டி.என்.பி.எஸ்.சி. டைப்பிஸ்டாக பணிபுரிந்த மதுராந்தகத்தைச் சேர்ந்த மாணிக்கவேல்(26), கூரியர் வேன் டிரைவராக வேலைபார்த்த திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம்(31) ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான சென்னை முகப்பேரை சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.

இதற்கிடையே ஏற்கனவே நடைபெற்ற குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது உறுதி ஆகியுள்ளது. குரூப்-2ஏ தேர்விலும் தரவரிசை பட்டியலில் முதல் 55 இடங்களுக்கு 30 இடங்களிலும், 100 இடங்களுக்குள் 37 இடங்களிலும் ராமேசுவரம் தேர்வு மையத்தில் எழுதியவர்கள் இடம்பிடித்திருந்தனர்.

இவர்களில் மாமல்லபுரத்தை சேர்ந்த திருக்குமரன், தற்போது குரூப்-4 தேர்வு முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையில், குரூப் 2ஏ முறைகேடு விவகாரத்தில், திருவண்ணாமலையை சேர்ந்த சுதாராணி, சென்னையை சேர்ந்த விக்னேஷ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் சுதாராணி, திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். விக்னேஷ், சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுத் துறையில் பிரிவு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இடைத்தரகர் ஜெயகுமாரின் கார் ஓட்டுநரான சம்பத் என்பவரின் மனைவி சுதாராணி என்று தெரிய வந்துள்ளது.

You'r reading குரூப் 2 தேர்விலும் முறைகேடு.. தலைமைச் செயலக அதிகாரி உள்பட 2 பேர் சிறையிலடைப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை